இலவச கல்வி 500 மாணவர்களைத் தத்தெடுக்கிறது சென்னை பல்கலை.
First Published : 08 Jul 2010 01:37:00 AM IST
Last Updated :
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு, அதிக விலை கொடுத்தால் மட்டுமே கிடைக்கக் கூடிய உயர்கல்வியை அளித்து, அவர்கள் பொருளாதாரத்தில் மட்டுமல்லாது சமூக தகுதியிலும் உயரம் பெற, உதவுவது முக்கியம். அதற்காக, 152 ஆண்டு கால பரம்பரியம் கொண்ட சென்னை பல்கலைக்கழகத்தின் இப்போதைய துணைவேந்தர் க. திருவாசகம் இலவச கல்வி திட்டத்தை கொண்டு வந்துள்ளார். இந்தத் திட்டம் பல்கலைக்கழகத்தில் மட்டும் கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது. தற்போது அது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் சுமார் 100 கலை, அறிவியல் கல்லூரிகளில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் இந்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது.ஒவ்வொரு கல்லூரியிலும் தலா 5 மாணவர்களுக்கு இந்தக் கல்வி வழங்கப்படும். இந்த இலவச கல்வி ஆனது, கலை கல்லூரிகளில் அரசு அளிப்பதாகக் கூறும் இலவச கல்வியில் இருந்து வேறுபட்டது. அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மட்டுமே அரசின் இலவச கல்வி உள்ளது. அதுவும் அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் அது கிடையாது. அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம்தான் கிடையாதே தவிர, சிறப்புக் கட்டணம், ஆய்வுக் கூட கட்டணம், மேம்பாடு கட்டணம், நூலக கட்டணம் என மற்ற எல்லா கட்டணங்களை மாணவர்கள் கட்டியாக வேண்டும். ஆனால், சென்னை பல்கலைக்கழகம் கொண்டு வந்துள்ள இலவச கல்வி என்பது அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் என 3 வகை கல்லூரிகளுக்கும் பொருந்தும். இங்கு இளநிலை, முதுநிலைப் படிப்புகளில் மாணவர் சேர்க்கையின் போது பெறப்படும் விதவிதமான கட்டணங்கள், விடுதிக் கட்டணம், உணவு கட்டணம் என எந்த கட்டணமும் கிடையாது. தேர்வுக் கட்டணம் மட்டுமே மாணவர்கள் செலுத்த வேண்டியிருக்கும். எந்தவொரு பொருளும் இலவசமாக கிடைக்கப்பெறும்போது அதற்கு மதிப்பு இருக்காது என்று சிலர் கூறுவது சில நேரங்களில் உண்மையாகிவிடுகிறது. அதனால் இலவச கல்வியைப் பெறுவதற்கு பல்கலைக்கழகம் சில நிபந்தனைகளை விதித்துள்ளது. மேலே உள்ள தகுதியுள்ளவர்களில் பெண்கள், பெற்றோர் இல்லாதோர், விதவைகள், திருநங்கைகள் ஆகியோருக்கு முன்னுரிமை உண்டு. இது தவிர, பருவத் தேர்வுகளில் எல்லா பாடங்களிலும் தேர்ச்சி பெறுவது மிக அவசியம். ஒரு பாடத்தில் தேர்ச்சி இல்லை என்றாலும் இலவசம் போய்விடும்.தவிர, பல்கலைக்கழகத்தின் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று ஏற்கெனவே கூறப்பட்டது. கல்லூரிகள் இடம் தருவதில் உள்ள தயக்கம் உள்ளிட்ட காரணங்களால் கால தாமதம் ஏற்பட்டது. அதனால் இந்த ஆண்டு கல்லூரிகள் சார்பில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அதனால் இலவச கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 10-ல் இருந்து 5 ஆக குறைந்துள்ளது.இது குறித்து துணைவேந்தர் திருவாசகம் கூறியது: அடுத்த ஆண்டில் முன் கூட்டியே திட்டமிடப்பட்டு பல்கலைக்கழகமே மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளும். பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளில் முதலாண்டு படிக்கும் மாணவர்கள் மேலே உள்ள தகுதிகளைக் கொண்டிருந்தால், அதற்கான சான்றிதழ்களை வட்டாட்சியர் அலுவலகங்களில் இருந்து பெற்று கல்லூரியில் அளிக்க வேண்டும். ஒவ்வொரு கல்லூரியும் தகுதியுள்ள மாணவர்களின் பட்டியலை ஆகஸ்ட் 5-ம் தேதிக்குள் பல்கலைக்கழகத்துக்கு அளிக்க வேண்டும். அவர்களில் 5 பேரை பல்கலைக்கழகம் தேர்வு செய்யும். இது குறித்து கல்லூரிகளுக்கு சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது என்றார். பி.இ. உள்ளிட்ட தொழில்படிப்பு கல்லூரிகளில் சேரும் முதல் தலைமுறை மாணவர்கள் கல்விக் கட்டண ரத்து சலுகை பெற, அவர்களுக்கு முதல் தலைமுறை மாணவர் என்ற சான்றிதழை தாசில்தார் அலுவலகங்கள் உடனடியாக வழங்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தியும் அதில் சிரமம் உள்ளது. எனவே, மாணவர்கள் உடனடியாக எளிய முறையில் சான்றிதழ் பெறும் வகையில் பல்கலைக்கழகத்தின் சார்பில் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தவிர, மாணவர் முதல் பட்டதாரியாக படிக்க வந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையைப் பரிசீலிப்பது தேவையானது. ஏனெனில், அவரது உடன் பிறந்தவர்கள் பட்டப் படிப்பு படித்தாலும் அவர்கள் பட்டம் பெறாத நிலையில் இருக்கலாம். தமிழகத்தில் உள்ள எல்லா பல்கலைக்கழகங்களும் இத்தகைய திட்டத்தை தங்கள் பகுதிகளில் செயல்படுத்த முன் வர வேண்டும். அப்படிச் செய்யும் போது தமிழகத்தின் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை 11 சதவீதம் அல்ல 15 சதவீதம் என்பதை விரைவாக நிரூபிக்க முடியும். ஏனெனில், அது 11 சதவீதமா அல்லது 15 சதவீதமா என்ற கருத்து ஏற்பட்டு, அது குறித்து ஆராய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இலவச கல்விக்கான தகுதிகள்1. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். 2. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு குறைவாக இருக்க வேண்டும். 3. சொந்த வீடு, சொந்த நிலம் இருக்கக் கூடாது. 4. குடும்பத்தில் முதல் பட்டதாரியாக படிக்க வந்திருக்க வேண்டும்.