Saturday, July 31, 2010 4:24 AM IST
Click
சினிமா
"ரசிகர்கள் உருவில் என் தாய், தந்தையரை காண்கிறேன்': நடிகர் கமல்ஹாசன்

First Published : 30 Sep 2009 02:15:12 AM IST

Last Updated : 30 Sep 2009 02:20:07 AM IST

சென்னை, செப். 29:  மறைந்த என் தாய், தந்தையரை ரசிகர்கள் உருவில் காண்கிறேன் என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ந்தார்.

விழாவில் கமல் பேசுவதற்கு முன்னதாக, மறைந்த அவருடைய பெற்றோர் சீனிவாசன்-ராஜலட்சுமி ஆகியோரின் உருவச் சிலைகளை கமல்ஹாசன் நற்பணி மன்றத்தினர் நினைவுப் பரிசாக வழங்கினர்.  

இதையடுத்து கமல் பேசியபோது...

""என் பெற்றோரின் உருவச் சிலைகளைப் பார்க்கும்போது அவர்கள் இங்கு இல்லையே என நான் நினைக்கவில்லை. இங்கு இருக்கும் பல நட்சத்திரங்கள் தங்களுடைய பணிகளை விட்டுவிட்டு இன்று எனக்காக வந்திருக்கிறார்கள்.

அதிக நேரமானால் விழாவுக்கு வந்தவர்கள் சென்றுவிடுவர்; அதனால் விழாவை விரைவாக முடிக்கக் கேட்டிருந்தேன். ஆனால் என் எண்ணத்தைப் பொய்யாக்கும் வகையில் அனைத்து நட்சத்திரங்களும் ரசிகர்களும் இங்கு பொறுமையாக அமர்ந்திருக்கிறார்கள்.

பிறகு ஏன் நான் என் தாய், தந்தையர் இல்லை என நினைக்க வேண்டும். அவர்கள் இங்குதான் இருக்கிறார்கள் எனக் கூறி கண் கலங்கியவாறு மேடையின் முன் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்து கை கூப்பி வணங்கினார்.

மேலும் பேசியபோது...

""இதை ஆரம்ப விழாவாகவும் நினைக்கவில்லை. நிறைவு விழாவாகவும் நினைக்கவில்லை. என் பயணத்தின் சம பாதி விழாவா என யோசிக்கிறேன். பெரும் கனவுகளோடு நான் திரையுலகுக்கு நுழைந்தபோது நான் திட்டமிட்டிருந்ததில் பாதியைக் கூட இன்னும் செய்யவில்லை. இது அவையடக்கம் அல்ல.

இந்த விழா, என் நேரம் குறைவு; செய்ய வேண்டிய வேலை அதிகம் இருக்கிறது என்பதை உணர்த்தியுள்ளது.

திரையுலகில் இதற்கு முன்பு இருந்த தலைமுறையில் என்னையும் ரஜினியையும் போல நண்பர்கள் யாரும் கிடையாது. அவர் தன்னைத் தாழ்த்திக்கொண்டு என்னைப் பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் பேசியதற்குக் காரணம் எங்களிடையே உள்ள ஆழமான நட்புதான். அதனால்தான் அவர் உண்மையான சூப்பர் ஸ்டார்.

அவரும் நானும் சாதித்ததற்குக் காரணம் நீங்கள் (ரசிகர்கள்) காட்டிய அன்புதான். அவர் தான் யார் என்பதைத் தேடி இமயமலைக்குச் செல்கிறார். நான் யார் என தேடி அலைந்துகொண்டிருக்கிறேன். ரஜினி, தான் யார் என்பதை ஆன்மிகத்தில் தேடுகிறார். நான் சமூகத்தில் தேடுகிறேன். அதற்கான தைரியத்தை எனக்குக் கொடுத்தது மக்கள்தான்.

நான் கடவுள் இல்லை என்று சொல்லவில்லை; இருந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் சொல்கிறேன். இந்த நேரத்தில், எனக்காக இறைவனிடம் வேண்டியவர்களைக் கிண்டல் செய்கிறேன் என்று மட்டும் கருதிவிடாதீர்கள். நான் இந்தக் கொள்கையில் இருந்தாலும் என்னிடம் வளர்ந்த என் மகள் ஷ்ருதி தைரியமாகக் கோயிலுக்குச் செல்வார். பொட்டு வைத்துக்கொள்வார். எனக்கும் வைத்துவிடுவார். அதை நான் அழிப்பதில்லை. அவருடைய அன்புக்காக பொட்டு வைத்துக்கொள்வேன் என்றார் கமல்.

அரிய வாய்ப்பை நழுவ விட்ட நாயகிகள்

கமல்ஹாசனின் பொன்விழா பாராட்டு நிகழ்ச்சியில், அவருடன் அதிக எண்ணிக்கையிலான வெற்றிப் படங்களில் நடித்த ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா, அம்பிகா, ராதா மற்றும் குஷ்பு உள்ளிட்ட முன்னணி நடிகைகள் தங்களுடைய சொந்தப் பணி காரணமாக பங்கேற்க இயலவில்லை. விழா நடைபெற்ற நேரு உள்விளையாட்டரங்கில் இருந்த பார்வையாளர்களும் எண்ணற்ற ரசிகர்களும் இந்த நடிகைகளின் வரவை ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இறுதி வரை அவர்கள் வராததால், கமல்ஹாசனின் பொன்விழாவில் கலந்துகொள்ளும் அரிய வாய்ப்பினை நழுவ விட்டதாகவே ரசிகர்கள் கருதினர்.

கருத்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்