பசங்க படத்துக்கு சர்வதேச விருது
First Published : 22 Nov 2009 01:42:15 AM IST
Last Updated :
பாண்டிராஜுக்கு தங்க யானை விருது வழங்குகிறார் நடிகை ஜூகி சாவ்லா.
சென்னை, நவ. 21: "பசங்க' திரைப்படத்துக்காக சர்வதேச அளவிலான சிறந்த இயக்குநருக்கான (தங்க யானை விருது) விருதை பெற்றார் இயக்குநர் பாண்டிராஜ். ஹைதராபாத்தில் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்ற சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் 20 நாடுகளைச் சேர்ந்த 70 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்த பட விழாவில் தமிழில் உருவாகி பெரும் வெற்றி பெற்ற "பசங்க' திரைப்படம் "கிட்ஸ்' என்ற பெயரில் திரையிடப்பட்டது. இயக்குநர் சசிகுமாரின் தயாரிப்பில், இயக்குநர் சேரனின் உதவியாளர் பாண்டிராஜ் இப்படத்தை இயக்கி இருந்தார். இப்படம் குழந்தைகளின் உலகத்தை தனி பாணியில் படம் பிடித்துக் காட்டியிருந்தது. திரைப்பட விழாவின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை (அக்-20) விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது இதில் சிறந்த குழந்தைகள் பட இயக்குநராக பாண்டிராஜ் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கான விருதை (தங்க யானை விருது) பிரபல இந்தி நடிகை ஜூகி சாவ்லா வழங்கினார். "ஹெல்ப் மைன் ஹெல்ப்' (ஈரான்), "டூ மென்'ஸ் கிளாஸ் ரூம்' (சீனா) சிறந்த திரைப்படங்களாகவும், "சைல்டு அண்ட் தி ஏஞ்சல்' (ஈரான்) சிறந்த திரைக்கதையுள்ள படமாகவும் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன. ""முதல் படத்திலேயே சர்வதேச விருது வாங்கிய அனுபவம் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இதற்கு காரணமாக இருந்த சசிகுமாருக்குதான் முதல் நன்றி. இந்தப் படத்தின் உருவாக்கத்துக்கு காரணமாக இருந்த அவருக்கும் இந்த விருதில் பங்குண்டு. சர்வதேச சினிமா ஜாம்பவான்கள் இருந்த அந்த சினிமா மேடையில் சிறந்த இயக்குநருக்கான விருது பெற்றதை எனக்கு கிடைத்த பெரிய கௌரவமாக நினைக்கிறேன்.'' என்றார் இயக்குநர் பாண்டிராஜ்.