சினிமா துறையில் இன்றும் மாணவன்தான்: கமல்ஹாசன்
First Published : 29 May 2009 10:45:00 PM IST
Last Updated :
சென்னையில் வியாழக்கிழமை தொடங்கிய ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் பயிலரங்க நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசன், கதாசிரியர்கள் அஞ்சும் ராஜா பாலி,
சென்னை, மே. 28: சினிமா துறையில் தான் இன்னும் மாணவன்தான் என்று நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள நடிகர் கமல்ஹாசன் கூறினார். கமல்ஹாசனின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் சார்பாக திரைக்கதை உருவாக்கம் குறித்த 7 நாள் பயிலரங்கம் சென்னை ஐ.ஐ.டி வாளகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. இதில் கமல்ஹாசன் பேசியதாவது: என்னைப் போன்றவர்களின் பல நாள் கனவு இன்று நனவாகியுள்ளது. இதை, நான் எடுத்த படங்களின் வெற்றி விழா என்பதை விட திரைத்துறையில் நான் இதுவரை அடைந்ததற்கான வெற்றி விழாவாகக் கருதுகிறேன். இப்போது இருப்பதை போன்ற இண்டர்நெட் உள்ளிட்ட மற்ற தொழில்நுட்பங்கள் இல்லாத காலத்தில் நான் சினிமா விஷயங்களை இயக்குநர்கள் பாலுமகேந்திரா, பாலசந்தர் போன்ற ஜாம்பவான்களிடம் பேசிப் பேசித்தான் கற்றுக் கொண்டேன். இப்போதும் துறைச் சார்ந்த மூத்தவர்கள் மற்றும் இளையவர்களிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்று வருகிறேன். ஏனென்றால் கேள்வி கேட்கும் மாணவத் திமிர் இன்னும் என்னிடம் இருக்கிறது. இன்றைய சூழலில் கற்றுத் தரும் ஆசிரியர்களிடம்தான் பொறுமையும், பணிவும் தேவை. இந்த பயிலரங்கத்தில் 250 மாணவர்களுக்கு முதல் கட்டமாக திரைக்கதை உருவாக்கம் பற்றி கற்றுத் தரப்படுகிறது. இது நல்ல சினிமா உருவாக வேண்டும் என்பதற்கான முன்னோட்டமாக இருக்கலாம். இந்த பயிலரங்கத்தில் சினிமா துறையில் இதுவரை நான் எதைக் கற்றேனோ அதைத்தான் மாணவர்களுக்கு கற்றுத் தர உள்ளேன். இந்த பயிலரங்கத்தில் இந்தியாவின் மிகச் சிறந்த கலைஞர்கள் பங்கேற்று மாணவர்களுக்கு திரைக்கதை உருவாக்கம் பற்றி கற்றுத் தருகிறார்கள். இது போன்ற ஒரு பயிலரங்கம் 30 ஆண்டுகளுக்கு முன்பே நடந்திருந்தால் இப்போது நான் அடைந்துள்ள முன்னேற்றத்தை 20 ஆண்டுகளுக்கு முன்பே அடைந்திருப்பேன். இந்த பயிலரங்கத்தை என் திரைப்பட ஆசான் அனந்து அவர்களுக்கு அர்பணிக்கிறேன் என்றார். நிகழ்ச்சியில் கதாசிரியர்கள் அஞ்சும் ராஜா பாலி, ஹரிஹரண், அதுல் திவாரி, ஐ.ஐ.டி. துறைத் தலைவர் சாண்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.