முக்கூடல் பேரூராட்சி ரசீதைத் திருடி பணம் வசூல்: பணியாளர் இடைநீக்கம்
First Published : 30 Jul 2010 12:09:00 PM IST
Last Updated :
அம்பாசமுத்திரம், ஜூலை 29: முக்கூடல் பேரூராட்சி ரசீதைத் திருடி நிர்வாக அதிகாரியின் கையெழுத்திட்டு வீட்டு வரி வசூலித்ததாக உதவியாளர் புதன்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டார். சேரன்மகாதேவி பழைய கிராமம் தெருவைச் சேர்ந்த மாடக்கண்ணு மகன் முருகன் என்ற பலவேசம் (52). முக்கூடல் பேரூராட்சி அலுவலக உதவியாளர். இவர் அந்த அலுவலகத்தில் இருந்து 3 வீட்டு வரி ரசீதுகளைத் திருடினாராம். இதில் ஒரு ரசீதில் சேரன்மகாதேவி பேரூராட்சி அலுவலக முத்திரை மற்றும் நிர்வாக அதிகாரியின் கையெழுத்து ஆகியவற்றை இட்டாராம். பின்னர் அந்த போலி ரசீதை அதே ஊர் ரயில் நிலைய சாலையில் வசிக்கும் இசக்கிமுத்துவிடம் கொடுத்து வீட்டு வரி பணம் வசூலித்தாராம். இதுகுறித்து முக்கூடல் பேரூராட்சி நிர்வாக அதிகாரி சு. சங்கரன் அளித்த புகாரின் பேரில் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதில், இசக்கிமுத்து வீட்டுக்கு மின் இணைப்பு பெற வீட்டு வரி செலுத்திய ரசீது தேவைப்பட்டதாம். அதற்காக அவர் முருகனைத் தொடர்பு கொண்டாராம். இதையடுத்து முருகன் போலியான ரசீது தயாரித்து இசக்கிமுத்துவிடம் கொடுத்ததாகத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, ஆட்சியர் உத்தரவின்பேரில் புதன்கிழமை முருகன் என்ற பலவேசம் இடைநீக்கம் செய்யப்பட்டார். அந்த உத்தரவைப் பெறாமல் முருகன் தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. இதனால், உத்தரவை வருவாய்த் துறை அதிகாரிகள் போலீஸôர் உதவியுடன் முருகன் வீட்டில் ஒட்டினர். மேலும் சேரன்மகாதேவி பேரூராட்சி நிர்வாக அதிகாரி அளித்த புகாரின்பேரில் முருகன் மீது சேரன்மகாதேவி போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.