Friday, September 03, 2010 2:14 PM IST
Click
தற்போதைய செய்திகள்
தஞ்சாவூரில் எரிசாராய ஆலை: அதிமுக நாளை ஆர்ப்பாட்டம்

First Published : 11 Nov 2009 02:41:10 PM IST


சென்னை, நவ.11: தஞ்சாவூர் மாவட்டம், வடசேரி கிராமத்தில் எரிசாராய ஆலையை துவக்க முயற்சிப்பதைக் கண்டித்து அதிமுக சார்பில் நாளை ஒரத்தநாட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய அமைச்சராக இருந்த போது தன்னுடைய நிறுவனங்களுக்காக 4.5 லட்சம் க்யூபிக் மீட்டர் வாயுவை மத்திய அரசிடமிருந்து பெற்ற டி.ஆர். பாலு, தற்போது தஞ்சாவூர் மாவட்டம், வடசேரி கிராமத்தில், விவசாயத்தை பாதிக்கக் கூடிய, நீராதாரத்தை அழிக்கக் கூடிய எரிசாராய தொழிற்சாலை அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

பின்தங்கிய வடசேரி பகுதியில் தொழில் துவங்கப் போவதாக ஊராட்சிக்குத் தகவல் தெரிவித்து, அதன் அடிப்படையில் ஊராட்சியில் தீர்மானமும் நிறைவேற்ற வைத்திருக்கிறார் டி.ஆர். பாலு.  இந்தத் தீர்மானம் மாவட்ட ஆட்சித் தலைவரின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

ஊராட்சி மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி ஊராட்சி மன்றத் தலைவரிடம் மக்கள் முறையிட்ட போது, "தீர்மானம் போடத்தான் அதிகாரம் உள்ளதே தவிர, தீர்மானத்தை ரத்து செய்ய அதிகாரமில்லை; மாவட்ட ஆட்சித் தலைவர் தான் அதை ரத்து செய்ய வேண்டும்" என்று கூறி அவர் ஒதுங்கிக் கொண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சூழ்நிலையில், மேற்படி நிறுவனத்தில் தற்போது ஒன்பது ஆழ்குழாய் கிணறுகள் அமைத்துள்ளதாகவும், இந்த ஆழ்குழாய் கிணறுகளிலிருந்து எடுத்து பயன்படுத்தும் நீர் கழிவாக வெளியேற்றப்படும் என்றும், இதன் காரணமாக நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என்றும், இந்தப் பகுதியில் எரிசாராய ஆலை தொடங்கப்பட்டால், ஆறே மாதத்தில் விவசாயத்திற்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகளிலும், விவசாயக் கிணறுகளிலும் நீர் முற்றிலும் வற்றிவிடும் என்றும், இதன் விளைவாக 5000 ஹெக்டேர் நிலங்கள் அழிந்துவிடும்  அபாயம் ஏற்படும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மக்களின் எதிர்ப்பை மீறி, பணிகளை துரிதமாக மேற்கொண்டு வரும் டி.ஆர். பாலுவை கண்டித்தும், விளை நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை கடுமையாக பாதிக்கக் கூடிய, சுவாச நோயை ஏற்படுத்தக் கூடிய எரிசாராய தொழிற்சாலை அமைய உறுதுணையாக இருக்கும் தமிழக அரசைக் கண்டித்தும், மக்களின் நலன் கருதி எரிசாராய தொழிற்சாலை அமைய அனுமதி அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும், அதிமுக சார்பில் வியாழக்கிழமை அன்று காலை  10 மணி அளவில், ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்