கொழும்பு, ஜூலை 30- அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட பின்னர், பல நாடுகள் போராட்டக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியதால் தான் விடுதலைப் புலிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டது என்று அந்த அமைப்பின் சர்வதேச தொடர்புத்துறையின் பொறுப்பாளராக இருந்த கே.பி. என்னும் குமரன் பத்மநாதன் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையைச் சேர்ந்த ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார் என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
2001ல் செப்டம்பர் 11-ம் தேதி நியூயார்க்கில் உள்ள இரட்டைக் கோபுரம் மீது அல்-காய்தா இயக்கம் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
இத்தாக்குதலுக்குப் பின்னர் பல நாடுகள் போராட்டக் குழுக்கள் தொடர்பான தங்களின் கொள்கையை மாற்றிக் கொண்டன என்றும், இதனால் விடுதலைப் புலிகளால் சர்வதசே உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது என்றும் கே.பி. கூறியுள்ளதாக அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உலகின் எந்தவொரு நாட்டிலும் தனி நாட்டு கோரிக்கை சாத்தியப்படாத ஒன்றாக இருப்பதாகவும், அந்த கருத்துக்கான வரவேற்பு குறைந்துவி்ட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
போரின் இறுதிக்கட்டத்தில் ஐ.நா. சபையுடன் தாம் தொடர்பில் இருந்ததாகவும், சரணடைவது தொடர்பான விவகாரத்தில் புலிகள் தலைவர் பிரபாகரன் விரைந்து செயல்படவில்லை என்றும் கே.பி. கூறியுள்ளார்.
வடக்கு மாகாண மேம்பாட்டு திட்டத்திற்காக, தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருப்பதாகவும் அதற்காக நிதி திரட்டப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் வெளியாகியுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.