கொழும்பு, ஜூலை 30- இலங்கையில் சியதா டி.வி. அலுவலகம் மீது இன்று அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.
வாய்ஸ் ஆஃப் ஏசியா நெட்வொர்க் என்னும் ஊடக நிறுவனம் சியதா டி.வி., மற்றும் 3 எப்.எம். ரேடியோக்களை நடத்தி வருகிறது.
இன்று அதிகாலை 1.30 மணியளவில், கொழும்பில் உள்ள அந்த நிறுவனத்தின் அலுவலகத்திற்கு பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் துப்பாக்கிகள் மற்றும் பெட்ரோல் குண்டுகளுடன் வந்து தாக்குதல் நடத்தினர். இதில், டி.வி. அலுவலகம் பலத்த சேதமடைந்தது. இதையடுத்து, ஒளிபரப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. எனினும், எப்எம் ரேடியோக்களின் ஒலிபரப்பு மட்டும் தொடர்ந்து செயல்பட்டது.
அதிபர் தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக இந்த ஊடக நிறுவனம் செயல்பட்டதால் தற்போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இத்தாக்குதல் தொடர்பாக தீவிர விசாரணை நடத்துமாறு காவல்துறை தலைவருக்கு இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.