பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வு முடிவு இன்று வெளியீடு
First Published : 31 Jul 2010 12:00:00 AM IST
Last Updated :
சென்னை, ஜூலை 30: பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு முடிவுகள் சனிக்கிழமை வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவை www.dge1.tn.nic.in, www.dge2.tn.nin.in ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம். மதிப்பெண் சான்றிதழ்கள் மாணவர்கள் தேர்வெழுதிய மையங்களில் ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் வழங்கப்படும். தட்கல் திட்டத்தின் கீழ் தேர்வெழுதியவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கு மதிப்பெண் சான்றிதழ் அனுப்பப்படும். இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் கூறியிருப்பது: சிறப்பு துணைத் தேர்வின் விடைத்தாள் நகல், மறுகூட்டல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை வழங்கப்படும். இந்த விண்ணப்பங்கள் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்கள், புதுச்சேரி இணை இயக்குநர் (கல்வி) அலுவலகம், சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஆகியவற்றில் கிடைக்கும்.விடைத்தாள் நகலுக்கான விண்ணப்பக் கட்டணம்: மொழிப் பாடம் ரூ.550; ஆங்கிலம்-ரூ.550, மற்ற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.275.மறு கூட்டலுக்கான கட்டணம்: தமிழ், ஆங்கிலம், உயிரியல் என ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.305; மற்ற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.205. கட்டணத்தை "இயக்குநர், அரசு தேர்வுகள், சென்னை -6' என்ற பெயரில் வங்கி வரைவோலை மூலம் செலுத்த வேண்டும். விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து, விண்ணப்பங்களை வாங்கிய இடங்களிலேயே ஆகஸ்ட் 4-ம் தேதி மாலை 5.45-க்குள் அளிக்க வேண்டும்.