பெரியாரின் எழுத்துகளை புத்தகமாக வெளியிட தடை கோரிய மனு தள்ளுபடி
First Published : 28 Jul 2009 11:41:00 PM IST
Last Updated :
சென்னை, ஜூலை 27: "குடியரசு' இதழில் வெளியான பெரியாரின் எழுத்துகளை, "பெரியார்
திராவிடர் கழகம்' புத்தகமாக வெளியிட தடை கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி
செய்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் திராவிடர் கழகத் தலைவரும் பெரியார் சுயமரியாதை
பிரசார இயக்கத்தின் செயலாளருமான கி. வீரமணி மனு தாக்கல் செய்தார்.
மனு விவரம்:
""குடியரசு' இதழைத் தொகுக்கும் முயற்சிகளை கி. வீரமணி மேற்கொள்ளவில்லை என்றும்,
அதனால், "குடியரசு' இதழில் வெளிவந்த பெரியாரின் எழுத்துகளை பதிப்பிக்க உள்ளதாக''
பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சுயமரியாதை பிரசார இயக்கத்தைத் தொடங்கிய பெரியார், அதன் சொத்துக்களை என்னிடம்
ஒப்படைத்துள்ளார். "குடியரசு' இதழில் வெளிவந்த அவரது எழுத்துகள், பேச்சுகள்
அனைத்தும் சுயமரியாதை பிரசார இயக்கத்துக்கு உரியது.
இதற்கான பதிப்புரிமையும் சுயமரியாதை பிரசார இயக்கத்திடமே உள்ளது.
எனவே, பெரியாரின் எழுத்துகளை பெரியார் திராவிடர் கழகம் வெளியிடுவதற்கு தடை
விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு நீதிபதி கே. சந்துரு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பெரியார் திராவிடர் கழகம் சார்பில் வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, இளங்கோ,
கிளாடியஸ் டேனியல் ஆகியோர் ஆஜராயினர்.
""பெரியார் தனது எழுத்துக்களுக்கான பதிப்புரிமையை யாரிடமும் அளிக்கவில்லை.
எனவே, பெரியார் சுயமரியாதை இயக்கத்தினர் பதிப்புரிமை கோர முடியாது'' என்று அவர்கள்
வாதாடினர்.
மனுவை விசாரித்த பிறகு நீதிபதி அளித்த தீர்ப்பு:
பெரியார் "குடியரசு' இதழில் மதம் மற்றும் சமூக, பொருளாதார விஷயங்கள் குறித்து
நிறைய எழுதியுள்ளார்.
இந்தப் படைப்புகளுக்கு பெரியார்தான் உரிமையாளர் ஆவார். எனவே, இந்த எழுத்துகளை
மீண்டும் பதிப்பிப்பதற்கான உரிமை முழுவதும் பெரியாரிடமே உள்ளது.
எழுத்துகளுக்கான உரிமை அறிவுசார் சொத்துரிமையின்கீழ் வருகிறது. எனவே, இந்த
உரிமையை மனுதாரரிடம் பெரியார் அளித்ததற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்.
பெரியார் தன் படைப்புகளுக்கான பதிப்புரிமையை கி. வீரமணியிடம் அளித்ததாக எந்த
ஆவணங்களிலும் குறிப்பிடப்படவில்லை.
இதுதொடர்பாக, பெரியாரின் உயிலிலோ அல்லது வேறு ஆவணங்களிலோ எந்தக் குறிப்பும்
இல்லை.
பெரியாரின் எழுத்துகளுக்கான பதிப்புரிமை தன்னிடம் உள்ளது என்பதை மனுதாரர்
நிரூபிக்கத் தவறியதால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
பெரியாரின் எண்ணங்கள் மக்களைச் சென்றடைய, "குடியரசு' வின் பல இதழ்கள் இலவசமாக
விநியோகிக்கப்பட்டுள்ளன. இது பெரியாரின் 130-வது ஆண்டு ஆகும். இந்நிலையில், அவரது
எழுத்துக்கான பதிப்புரிமை தொடர்பான சட்ட விவாதம் வேதனையைத் தருகிறது என்று நீதிபதி
தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.