சென்னை, நவ. 10: தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு மாநில அரசு தலா ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகள் குறித்து தி.மு.க. அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்வதாக தெரியவில்லை.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக, வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, தேனி மாவட்டம் முழுவதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகள் சரியாக தூர்வாரப்படாததால், கூழையாறு, வளவனாறு போன்ற கிளை ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டு, 2.5 லட்சம் ஏக்கரில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இதேபோன்று கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம் உள்பட பல மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதோடு, பயிர்கள் அழுகும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் பகுதிகளைச் சேர்ந்த பல கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் உயிர் நாடியான காண்டூர் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் திருமூர்த்தி அணைக்கு வரும் நீர்வரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் கடலுக்குள் செல்ல முடியாமல் வருமானம் இன்றி தவிக்கிறார்கள். பல இடங்களில் சாலைகள் பழுதடைந்து, போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளது.
சென்னையில், மழைக் காலங்களில் பங்கிங்காம் கால்வாய் நிரம்பி வழிவதால், கொட்டிவாக்கம், நீலாங்கரை, பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், ஒக்கியம், துரைப்பாக்கம், சோளிங்கநல்லூர், காரப்பாக்கம், பள்ளிக்கரனை, வேளச்சேரி, மடிப்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், பெருங்குடி போன்ற பகுதிகள் நீரில் மூழ்கி விடுகின்றன.
இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காணும் வகையில், மழைக் காலங்களில் பங்கிங்காம் கால்வாயிலிருந்து இந்தப் பகுதிகளுக்கு நீர் செல்லாமல் தடுக்க வேண்டும். எனவே, ஒக்கியம் மடுவு வழியாக தண்ணீர் நேரடியாக கடலுக்குச் செல்லும் வகையில், மூன்று கால்வாய்களை முறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்யுமாறு 2005 இறுதியில் பொதுப்பணித் துறைக்கு நான் உத்தரவிட்டேன்.
பின்னர் வந்த தி.மு.க. அரசு அதை செயல்படுத்தியிருந்தால், இந்தப் பகுதிகள் இப்போது நீரில் மூழ்கியிருக்காது.
2005-ல் பெருவெள்ளம் ஏற்பட்டபோது அனைத்து இடங்களுக்கும் நான் நேரில் சென்று, நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளையும் உடனுக்குடன் செய்ய உத்தரவிட்டேன். இயற்கை சீற்றத்தால் மக்கள் பாதிக்கப்படும்போது, உடனுக்குடன் துயர்களை களைவதில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்கியது. ஆனால், இன்று தமிழக மக்கள் நாதியற்று நிற்கிறார்கள்.
2005-ம் ஆண்டு எனது ஆட்சிக் காலத்தில் அனைவருக்கும் தலா ரூ.2 ஆயிரம் வெள்ள நிவாரணத் தொகுப்பு வழங்கப்பட்டது. நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்களுக்கு இழப்பீடாக ஒரு ஏக்கருக்கு ரூ.3000, தென்னைக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.4,800 வழங்கப்பட்டது.
இப்போது விலைவாசி மூன்று மடங்கிற்கு உயர்ந்துள்ள நிலையில், பயிருக்கான இழப்பீடு மற்றும் வெள்ள நிவாரணத் தொகையை மூன்று மடங்கு உயர்த்தி வழங்க வேண்டும். வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.
துண்டிக்கப்பட்ட மற்றும் பழுதுபட்ட சாலைகளை செப்பனிடவும், தண்ணீர் வடிந்த பகுதிகளில் மின்சாரம் வழங்கவும் முதல்வர் கருணாநிதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.