சென்னை, நவ. 10: தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மழை நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகம் முழுவதும் பெய்து வருகின்ற பெருமழையால், இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் பலர் உயிரிழந்து உள்ளனர்.
கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையின்போது, மக்கள் பல நாட்கள் வீட்டுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அரசு நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால், வழக்கம்போல் இந்த ஆண்டும் மக்கள் முடங்கிக் கிடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை நகரின் அனைத்துச் சாலைகளும் ஒரே நாள் மழையில் குண்டும் குழியுமாகி விட்டன. பல இடங்களில் சாலைகளில் ஐந்தடி, ஆறடி பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. வாகன ஓட்டிகள் பெரும் துன்பத்துக்கு ஆளாகி உள்ளனர்.
போக்குவரத்து நெரிசலால் பல மணி நேரம் மழையில் நனைந்து கிடக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. எந்த இடத்திலும் நடைமேடைகள் என்பதே இல்லை. எனவே, பாதுகாப்பாக நடப்பதற்கும் வழி இல்லை.
மழை வெள்ளத்தால் உயிர் இழந்தோரின் குடும்பங்களுக்கு ம.தி.மு.க. சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, போர்க்கால அடிப்படையில் உதவிப் பொருட்களை உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.