சென்னை, நவ. 10: சிப்காட் அமைப்பதற்காக 1700 ஏக்கர் விளை நிலத்தை தரிசு நிலமாக காட்ட முயற்சி நடப்பதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது:
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகாவுக்கு உள்பட்ட மேல மீனாட்சிபுரம், கீழ மீனாட்சிபுரம், தெற்கு ஆவாரங்காடு, ராமச்சந்திராபுரம், சுப்பிரமணியாபுரம், லட்சுமிபுரம், மேட்டூர், முப்பிலிப்பட்டி ஆகிய 8 கிராமங்களை உள்ளடக்கிய 1700 ஏக்கர் விவசாய நிலத்தில் சிப்காட் அமைக்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்காக இந்த விவசாய நிலத்தை ஆர்ஜிதம் செய்வதற்கான ஆய்வு பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இந்த 8 கிராமங்களிலும் 70 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்ட மக்கள். மீதம் உள்ளோர் பிற்படுத்தப்பட்டோர்.
இவர்களுக்கு இந்த நிலம்தான் வாழ்வாதாரமாகும். 1700 ஏக்கர் விளை நிலத்தை தமிழக அரசு ஆர்ஜிதம் செய்தால் 8 கிராமங்களைச் சேர்ந்த 5000 பேர் வேறு வழி இல்லாமல் அனாதைகளாக நிற்க வேண்டியிருக்கும்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பதவி ஏற்ற தி.மு.க. அரசு நிலம் இல்லா ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்குவதாக உறுதி கூறியது. ஆனால் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளிடம் இருந்து நிலத்தை கைப்பற்ற நினைப்பது தவறு.
எனவே விளை நிலத்தை ஆர்ஜிதம் செய்யும் முயற்சியை தமிழக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு விளை நிலத்தை ஆர்ஜிதம் செய்யும் முயற்சியை அரசு கைவிடாவிட்டால் தமிழகம் தழுவிய மிகப் பெரிய போராட்டம் நடைபெறும் என்றார் அவர்.
இந்த சந்திப்பின் போது 8 கிராமங்களைச் சேர்ந்த பெண்கள்கள் உள்பட 60 பேர் கலந்து கொண்டனர்.