ஜே. என். யூ. பல்கலைத் திலகம்!

First Published : 14 April 2012 04:49 PM IST

கல்வியாளர், மாணவர்களிடையே ஜே.என்.யூ. என்றாலே அது தலைநகர் தில்லியிலுள்ள ஜவாஹர்லால் நேரு யூனிவர்சிடிதான்! நவீன இந்தியாவின் கல்வி நிறுவனங்களில் ரத்தினம் போலத் திகழும் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஜே.என்.யூ என்ற சுருக்கப் பெயரிலேயே பிரபலமாக விளங்குகிறது. பாராளுமன்ற மசோதா மூலம் 1969-ல் உருவாக்கப்பட்ட இந்தப் பல்கலைக் கழகம் ஆயிரம் ஏக்கர் பரப்பில் உள்ள மெகா கேம்பஸில் அமைந்துள்ளது. இந்தியக் கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி, ஆராய்ச்சி ஆகியவற்றுக்குத் திலகம்போலத் திகழவேண்டுமென்பது இதை உருவாக்கியோரின் கனவாக இருந்தது. தேசிய ஒருமைப்பாடு, ஜனநாயக நெறிகள், அனைத்து விஷயங்களிலும் சர்வதேச நோக்கு, எந்த சமூகப் பிரச்னையையும் விஞ்ஞானபூர்வமாக ஆராய்வது எனும் சிந்தனைகள் இந்தப் பல்கலைக்கழகத்தின் அடிப்படைப் பண்பு என்று கூறலாம். ஆசிரியர்-மாணவர் விகிதம் 1:10 என்ற அளவில் இருக்கிறது என்றால், அதிலிருந்தே இங்குள்ள வகுப்புகளில் கல்வி கற்பிக்கப்படும் சூழலைப் புரிந்து கொள்ளலாம். இங்கே மாணவர்கள் சுயமாக சிந்தித்து செயல்படுவதற்கு ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

இந்தக் கல்வி வளாகம் ஒரு குட்டி இந்தியா என்றால் அது மிகையாகாது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், அனைத்துப் பிரிவிலிருந்தும், அனைத்துப் பொருளாதாரப் பின்னணியில் உள்ளவர்களும் இங்கு பயில வருகின்றனர். இப்பல்கைலைக் கழகத்தில் கல்வி கற்பவர்களில் ஏறத்தாழ 10 சதவீதம் மாணவர்கள் அயல்நாட்டிலிருந்து வருபவர்கள்.

பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இங்கு படிக்கவருவதால், தேசத்தைப் பற்றியும், சமூகத்தைப் பற்றியும் ஜே.என்.யூ மாணவர்களின் கண்ணோட்டம் முற்றிலும் வித்தியாசமாக உள்ளது. இங்கு கல்வி பெற்றுச் சென்றவர்களில் பலர் வெளிநாடுகளில் முக்கியப்பொறுப்புகளை உடைய பணியில் உள்ளார்களாக இருக்கின்றனர்.

பலர் இந்திய பணி ஆணையம் போன்ற முக்கிய பணிகளில் உள்ளனர். இங்கு பயின்றவர்கள், இந்தியாவின் சிறந்த கல்வி, ஆராய்ச்சி நிறுவனங்கள், ஊடகங்கள், தொண்டு நிறுவனங்கள், பெரும் நிதி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரிகின்றனர்.

ஜே.என்.யூ.வில் மாணவர்களின் கல்வித்திறன் எப்போதும் பரிசோதிக்கப்படுகிறது. கல்வி பயிலும்போதே ஆசிரியப் பணியில் பங்கு பெறுவது, ஆராய்ச்சி ஆகியவற்றில் மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும். ஆய்வரங்குகள், புதிர்ப் போட்டிகள், கலந்துரையாடல்களில் கலந்து கொள்வது போன்ற குழுவாக இயங்கும் பாடமுறைகள் இந்தப் பல்கலைக் கழகத்தின் சிறப்பாகும். கல்வி பெற்ற மாணவர்களின் திறனைப் பரிசோதிக்க இங்கு நடைமுறையிலுள்ள தேர்வு முறைகள் இப்போது இந்தியாவில் பல பல்கலைக்கழகத்தில் பின்பற்றப்படுகின்றன.

இங்கு மாணவர் சேர்க்கைக்கு இந்தியா முழுவதும், 39 மையங்களில் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதனால் நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் ஜே.என்.யூவில் சேர்ந்து கல்வி பெறுவதற்கு இது பெரிதும் உதவி செய்கிறது.

கல்வி மையங்கள்

இந்தப் பல்கலைக் கழகத்தில் 13 பிரிவில் கல்வி மையங்கள் இயங்கி வருகின்றன.

1. ஸ்கூல் ஆஃப் இண்டர்நேஷனல் ஸ்டடீஸ்

2. ஸ்கூல் ஆஃப் லாங்வேஜ், லிட்டரேச்சர், கல்சர்ஸ்டடீஸ்

3. ஸ்கூல் ஆஃப் லைஃப் ஸயன்ஸஸ்

4. ஸ்கூல் ஆஃப் சோஷியல் ஸயன்ஸஸ்

5. ஸ்கூல் ஆஃப் என்வெரான்மென்டல் ஸயன்ஸஸ்

6. ஸ்கூல் ஆஃப் கம்ப்யூட்டர் & சிஸ்டம்ஸ் ஸயன்ஸஸ்

7. ஸ்கூல் ஆஃப் ஃபிசிக்கல் ஸயன்ஸஸ்

8. ஸ்கூல் ஆஃப் கம்ப்யூட்டேஷனல் & இண்டக்ரேடிவ் ஸயன்ஸஸ்

9. ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் & எஸ்தெடிக்ஸ்

10.ஸ்கூல் ஆஃப் பயோடெக்னாலஜி

11.சென்டர் ஃபார் சம்ஸ்கிருத் ஸ்டடீஸ்

12.சென்டர் ஃபார் மாலிக்யூலர் மெடிசின்

13.சென்டர் ஃபார் ஸ்டடி ஆஃப் லா & கவர்னன்ஸ்

இந்த 13 கல்வி மையங்களின் கீழ் பல்வேறு வகையான உயர்கல்வி மேற்கொள்ளலாம். இதில் சில மையங்களின் கீழ் பல உட்பிரிவுகளாக தனித்து இயங்கும் மையங்களும் உள்ளன.

உதாரணமாக, ஸ்கூல் ஆஃப் இண்டர்நேஷனல் ஸ்டடீஸ் எனும் மையத்தின் கீழ் ஐரோப்பிய, கிழக்காசிய, மேற்காசியக் கல்வி மையங்கள் போன்ற 11 பல்வகையான தனி மையங்கள் பல்வேறு நாடுகளுக்கான தனித்தனி பிரிவுகளுடனும், பாடத் திட்டங்களுடனும் இயங்கி வருகின்றன.

இப்போது சர்வதேசக் கல்வி பயிற்றுவிக்கும் ஸ்கூல் ஆஃப் இண்டர்நேஷனல் ஸ்டடீஸ் என்ற மையமானது இந்தப் பல்கலைக்கழகம் துவக்கப்படும் முன்பே 1955-ல் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அது தொடங்கப்பட்டபோது தில்லி பல்கலைக் கழகத்துடன் இணைந்திருந்தது. ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகம் உருவானதும் 1960-ம் ஆண்டு அதனு

டன் இணைக்கப்பட்டது இந்த மையம். வரலாற்று ஆய்வுகள், அரசியல் ஆய்வுகள், பொருளாதார ஆய்வுகள், சமூக அறிவியல் ஆய்வுகள் இவற்றுக்கான மையங்கள் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யூ.ஜி.சி) சிறந்த கல்வி ஆய்வு மையங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேலும், ஸ்கூல் ஆஃப் ஃபிசிக்கல் ஸயன்ஸ், ஸ்கூல் ஆஃப் லைஃப் ஸயன்ஸ், ஸ்கூல் ஆஃப் என்வெரான்மென்டல் ஸயன்ஸ் ஆகியவையும் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.

மாணவர் யூனியன் தேர்தல்கள்
ஆண்டுதோறும் ஆசிரியர் துணையோ, தலையீடோ இல்லாமல் நடக்கும் மாணவர் யூனியன் தேர்தல்கள் ஜே.என்.யூ மாணவர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கும் சிறப்பான விஷயம். இந்தத் தேர்தலுக்காக மாணவர்கள் தாங்களே ஒரு தேர்தல் ஆணையத்தை உருவாக்குகின்றனர். போஸ்டர், பிரசாரம், வளாகத்தினுள் மாணவரிடையே பொதுக்கூட்

டம் எல்லாம் உண்டு. தேர்தலின்போது நிலவும் கடும்போட்டியைப் பார்த்தால் அரசியல் கட்சித் தேர்தலோ என்று தோன்ற வைக்கும் அளவுக்கு கலகலப்புடன் பட்டையைக் கிளப்பும் தேர்தல் இது!

கல்வி உதவித் தொகை
பொருளாதார வசதி குறைவாக இருக்கிற மாணவர்கள் பயன்பெறும் விதமாக, இங்கு கல்வி உதவித் தொகைக்கு மானியத் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்தப் பல்கலைக் கழகத்தில் கிடைக்கும் கல்வி உதவித் தொகை பெற்று மாணவர்கள் தங்கள் கல்வியைத் தொடரலாம்.

ஜேஎன்யூவில் கல்வி பெறும் மாணவர்களின் தேவைக்கென்றே பல்கலைக் கழக மானியக் குழுவின் மூலம் கிடைக்கும் கல்வி உதவித்தொகை, மாநில அரசுகளின் கல்வித் தொகை என கிடைக்கின்றன. இது தவிர, பல்வேறு துறைகளில் படிக்கும் தகுதியுள்ள மாணவர்களுக்காகவே இந்தப் பல்கைக் கழகத்தில் பல்வேறு முக்கிய நபர்கள், கல்வியாளர்கள் பெயரில் கல்விக் கொடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் கிடைக்கும் உதவித் தொகையையும் மாணவர்கள் பெறலாம்.

நூலகம்
இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவன நூலகம் என்று சொல்லும் அளவுக்கு தனித்துவம் வாய்ந்த நூலகம் ஜே.என்.யூ.வில் உள்ளது. இந்த நூலகம் 9 அடுக்கு கட்டடத்தில் அமைந்துள்ளது. ஒரு லட்சம் சதுர அடி பரப்புள்ளது. அனைத்து இந்திய அரசு வெளியீடுகள், ஐக்கிய நாடுகள் போன்ற சர்வதேச அமைப்புகள், துணை அமைப்புகள் ஆகியவற்றின் ஆய்வு வெளியீடுகள் இங்கு உள்ளன. 22 சர்வதேச ஆன்லைன் தரவுதளங்களை (டேட்டாபேஸ்) பயன்படுத்தலாம். இதன் மூலம் முழு அளவில் 10,000 எலக்ட்ரானிக் பத்திரிகைகள் பயன்பாட்டுக்குக் கிடைக்கிறது. ஆன்லைனில் 4,500 ஆய்விதழ்களும் முழுமையாகக் காணக் கிடைக்கும். 200 கம்ப்யூட்டர்கள் கொண்ட ஸைபர் லேப் இந்த ஆண்டுதான் தொடங்கப்பட்டது. மேலும் காது கேளாதோர், பார்வையற்றோர் பயன்பெறும் வகையில், சிறப்பு கம்ப்யூட்டர் வசதி இங்கு உள்ளது. இந்தியாவின் பிரெய்ல் முறையில் அச்சடிக்கும் ஒரே கம்ப்யூட்டர் பிரிண்டர் இங்

குதான் இருக்கிறது.

இப்பல்கலைக்கழகத்தில் தமிழுக்கென்று ஓர் ஆய்விருக்கை உள்ளது. தமிழைச் செம்மொழியாக மத்திய அரசு அறிவித்ததை ஒட்டி, தமிழக அரசு சார்பில் தமிழ் ஆய்விருக்கை உருவாக்கப்பட்டது. இது தவிர ராஜீவ் காந்தி, நெல்சன் மண்டேலா, பி.ஆர். அம்பேத்கர், சர்வதேச அரசியல் கல்வி நிபுணர் பேராசிரியர் ஏ. அப்பாதுரை ஆகியோர் பெயரிலும் ஆய்விருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தொடர்புக்கு
புது தில்லியின் தென்பகுதியில் அமைந்துள்ளது ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகம். தில்லியில் உள்ள மூன்று ரயில் நிலையங்களிலிருந்தும் இதை எளிதில் சென்றடையலாம். அதே போல, தில்லியின் பிரதான மாநில பஸ் நிலையத்திலிருந்தும் ஜே.என்.யூ. கேம்பசுக்கு எளிதில் செல்ல முடியும். புது தில்லியின் சர்வதேச விமான நிலையமும் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து அதிக தூரமில்லை.இணையதளம்: www.jnu.ac.in

A+ A A-

இந்த பகுதியில் மேலும்

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
கருத்தை பதிவு செய்க
*
1000 ஏதாவதொன்று

வாசகரின் கருத்துகள் தணிக்கைக்கு உட்பட்டவை

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.