ஓய்வறையை சேதப்படுத்தவில்லை: பஞ்சாப் அணி மறுப்பு
By
First Published : 15 April 2012 01:32 AM IST
புது தில்லி, ஏப்.14: புணே வாரியர்ஸýக்கு எதிரான ஆட்டத்தின்போது வீரர்கள் ஓய்வறையை பஞ்சாப் அணி வீரர்கள் சேதப்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை அந்த அணி மறுத்துள்ளது.
வீரர்களின் ஓய்வறை சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் பஞ்சாப் வீரர்கள் யாருக்கும் தொடர்பில்லை என்பதை தெளிவுபடுத்த இருப்பதாக அந்த அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் அணியின் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. எங்கள் வீரர்கள் உண்மையான உத்வேகத்தோடு விளையாடக்கூடிய அளவுக்கு முதிர்ச்சியடைந்தவர்கள் என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
புணே வாரியர்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிய ஐபிஎல் லீக் ஆட்டம் கடந்த 8-ம் தேதி புணேவில் புதிதாக கட்டப்பட்டுள்ள மைதானத்தில் நடைபெற்றது.
அந்த ஆட்டத்தின்போது வீரர்களின் ஓய்வறையை பஞ்சாப் வீரர்கள் சேதப்படுத்தியதாக ஐபிஎல் நிர்வாகத்திடம், மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கம் புகார் செய்துள்ளது. முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லாவிடம், மகாராஷ்டிர கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் புகார் செய்தனர். அதில், "பஞ்சாப் அணியின் கேப்டன் ஆடம் கில்கிறிஸ்ட் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அதனால் ஆத்திரமடைந்த அவர் வீரர்கள் ஓய்வறையின் ஜன்னல் கதவை அடித்து உடைத்துள்ளார்' என்று கூறியிருந்தனர்.
ஐபிஎல் விதிமுறைப்படி இதுபோன்ற பிரச்னைகளை மேட்ச் ரெப்ரியே விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதால், வீரர்கள் ஓய்வறை சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தை மேட்ச் ரெப்ரிக்கு அனுப்பினார் ராஜீவ் சுக்லா. அதன்பேரில் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டதில், பஞ்சாப் வீரர் பால் வல்தாட்டிதான் வீரர்கள் ஓய்வறையை சேதப்படுத்தியுள்ளார். கில்கிறிஸ்ட் எந்தத் தவறும் செய்யவில்லை என்று ஐபிஎல் வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும் வல்தாட்டி திட்டமிட்டு இதைச் செய்யவில்லை. எதிர்பாராதவிதமாகவே இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் அவர் எவ்வித தண்டனையுமின்றி தப்பினார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த பகுதியில் மேலும்
பரிந்துரைகள்
- கிரிக்கெட் வீரர் ரெய்னாவுடன், ஸ்ருதிஹாசன் நெருக்கம்?
- பிரதமர் மன்மோகன் பற்றிய அடுத்த சர்ச்சை கிளம்பிவிட்டது
- கைக்குட்டை மூலம் சைகை! ஐபிஎல் சூதாட்டத்தில் ஸ்ரீசாந்த் விநோதம்!
- 32 ஆண்டுகளுக்குப் பிறகு திரையில் இணையும் ஜோடி
- நாட்டின் முதல் பெண் ராணுவ வீராங்கனை தற்கொலை
- ஐபிஎல்.லில் ஸ்பாட் பிக்ஸிங் முறைகேடு: ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூவர் கைது
கருத்தை பதிவு செய்க