பைபிள் போதனைகளைப் பின்பற்றி வளர்ந்தவள் நான்: முதல்வர் ஜெயலலிதா
By dn, சென்னை
First Published : 11 December 2012 06:21 AM IST
-
அதிமுக சார்பில் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழாவில், முதல்வர் ஜெயலலிதா வெட்டிய கேக்கை அவருக்கு ஊட்டுகிறார் சென்னை மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் ஏ.எம்.சின்னப்பா. உடன், (இடமிருந்து) இந்திய ஆர்த்தடாக்ஸ் திருச்சபையின் சென்னை மறை மாவட்ட ஆயர் யோகனோன் மார் டயாஸ்கோரோஸ், இந்திய சுவாதீன திருச்சபையின் தலைமைப் பேராயர் எம்.பிரகாஷ், தென்னிந்திய திருச்சபையின் சென்னை பேராயர் தேவசகாயம், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், அமைப்புச் செயலாளர் பி.எச்.பாண்டியன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஆர்.சரத்குமார்.
"நான் பைபிள் போதனைகளைப் பின்பற்றி வளர்ந்தவள்' என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
அதிமுக சார்பில் சென்னையில் திங்கள்கிழமை கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெற்றது. சென்னை-மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் ஏ.எம்.சின்னப்பா ஜெபம் செய்து விழாவைத் தொடங்கி வைத்தார். கிறிஸ்துமஸ் கேக்கை வெட்டிய முதல்வர் ஜெயலலிதா, அதை சின்னப்பாவுக்குக் கொடுத்தார். அதன்பின், அவர் ஆற்றிய உரை:
கிறிஸ்துமஸ் என்றவுடன் எனது நினைவுக்கு வருவது என் பள்ளிப் பருவம்தான். ஆரம்பக் கல்வியை பெங்களூரில் உள்ள பிஷப் காட்டன் பெண்கள் பள்ளியில் தொடங்கினேன். பின்னர், சென்னையிலுள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் ஓராண்டு கல்வி பயின்றேன். பின்னர், பெங்களூர் சென்று அங்குள்ள பிஷப் காட்டன் பள்ளியில் 4 ஆண்டுகள் பயின்றேன். சென்னை வந்தவுடன் சர்ச் பார்க் பள்ளியில் 1964-ல் எனது மெட்ரிக் படிப்பை முடித்தேன். கிறிஸ்தவப் பள்ளிகளில் நான் பெற்ற கல்வியும், நற்பண்புகளும்தான் எனது முன்னேற்றத்துக்குக் காரணம்.
அப்போது நான் கற்றுக் கொண்டவைதான் எனக்கு இன்றும் உறுதுணையாக இருக்கின்றன. எந்தப் பெரும் பொறுப்பையும் எளிதாக நிறைவேற்ற முடிகிறது. பெங்களூரில் பிஷப் காட்டன் பள்ளியில் படிக்கும்போது, அங்குள்ள சிறிய தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் பைபிள் வகுப்புகள் நடப்பது வழக்கம். அங்கு பெரும்பாலும் கிறிஸ்தவ மத மாணவியரே செல்வார்கள். எனினும், நானும் அந்த வகுப்புகளுக்குச் செல்வேன்.
அப்போது வண்ணமிகு படங்களுடன் கூடிய பைபிள் கதை புத்தகங்களை வழங்குவார்கள். அவற்றை வீட்டுக்குக் கொண்டு வந்து படிப்பேன். எனவே, பைபிளில் கூறப்பட்டுள்ள கதைகள் எல்லாம் நான் நன்கு அறிவேன்.
இந்தக் கதைகள் வாழ்வியலுக்குத் தேவையான நன்னெறிகளை போதிக்கின்றன. இந்தப் போதனைகளை பின்பற்றி வளர்ந்தவள். அன்பு பொறுமையுள்ளது, நன்மை செய்யும். பொறாமைப்படாது. தற்புகழ்ச்சி கொள்ளாது. இறுமாப்பு அடையாது. இழிவானதைச் செய்யாது. தன்னலம் நாடாது. சினமடையாது. தீங்கு நினையாது. தீவினையில் மகிழ்வுறாது.
எதையும் பொறுத்துக் கொள்ளும் என்று அன்பைப் பற்றி வேதாகமத்தில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளது.
அன்பால் வாழ்ந்து, அயலார்க்கு உதவி, பேரின்பத்தை நீங்கள் அனைவரும் பெற வேண்டும். இதுவே எனது விருப்பம் என்றார் முதல்வர் ஜெயலலிதா.
அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ஜே.சி.டி. பிரபாகரன் விழாவுக்கு வந்திருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
வேளாங்கண்ணி படத்தில் சம்பளம் வாங்கவில்லை
நான் நடித்த அன்னை வேளாங்கண்ணி படத்துக்காக சம்பளம் பெறவில்லை என்று முதல்வர் ஜெயலலிதா தனது பழைய ஞாபகங்களை நினைவுகூர்ந்தார். சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற கிறிஸ்தவப் பெருவிழாவில் அவர் பேசியது:
பேராயர் சின்னப்பா என்னிடம் மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது, பல ஆண்டுகளுக்கு முன்பு நான் நடித்த அன்னை வேளாங்கண்ணி படத்தைப் பார்த்ததாகத் தெரிவித்தார். இந்த மேடையில் சில அன்பர்கள் அன்னை வேளாங்கண்ணி மாதாவின் திருவுருவச் சிலையை எனக்குப் பரிசாக வழங்கினார்கள். அதைப் பார்த்து விட்டு அன்னை வேளாங்கண்ணி படம் நினைவுக்கு வருவதாகத் தெரிவித்தார் பேராயர் சின்னப்பா.
அந்தப் படத்தைத் தயாரித்தவர் மறைந்த திரைப்பட நடன ஆசிரியர் தங்கப்பன். அவர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். அவருக்காக அந்தப் படத்தில் நடித்த நானும் மற்ற நடிகர், நடிகையரும் சம்பளம் பெறவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆகவே அந்தக் காலம் தொட்டே கிறிஸ்தவர்கள் மீதும், கிறிஸ்தவ மதத்தின் மீதும் எனக்கு அவ்வளவு மதிப்பும், மரியாதையும் இருந்து இருக்கிறது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்வதில் பெருமைப்படுகிறேன் என்றார் முதல்வர் ஜெயலலிதா.
கருத்துகள்(6)
ஐயோ ஐயோ.....நம்பிட்டோம்....
பதிவுசெய்தவர் sathyam 12/11/2012 07:36 இதற்கான பதில் முறையற்ற கருத்து
பைபிளின் பத்துக் கட்டளைகளில் ஒன்றையாவது கடைபிடித்திருந்தாலும் உங்களை மதித்திருப்பேன். (டான்ஸ் மாஸ்டர் தங்கப்பன் ஒரு இந்து கிறித்தவறல்ல.மற்றொரு செய்தி இந்தப் படத்தில் கமலஹாசன் முதன் முதலாக உதவி இயக்குனராகப் பணியாற்றினார்)
பதிவுசெய்தவர் தமிழே துணை 12/11/2012 08:06 இதற்கான பதில் முறையற்ற கருத்து
பைபிளின் பத்துக் கட்டளைகளில் ஒன்றையாவது கடைபிடித்திருந்தாலும் உங்களை மதித்திருப்பேன். (டான்ஸ் மாஸ்டர் தங்கப்பன் ஒரு இந்து கிறித்தவறல்ல.மற்றொரு செய்தி இந்தப் படத்தில் கமலஹாசன் முதன் முதலாக உதவி இயக்குனராகப் பணியாற்றினார்)
பதிவுசெய்தவர் தமிழே துணை 12/11/2012 08:07 இதற்கான பதில் முறையற்ற கருத்து
அப்ப்ப்பப்ப்ப்புடியா............................. "அன்பு பொறுமையுள்ளது, நன்மை செய்யும். பொறாமைப்படாது. தற்புகழ்ச்சி கொள்ளாது. இறுமாப்பு அடையாது. இழிவானதைச் செய்யாது. தன்னலம் நாடாது. சினமடையாது. தீங்கு நினையாது. தீவினையில் மகிழ்வுறாது. " ஆத்தா...... இதுக்கெல்லாம் அர்த்தம் என்னான்னு உங்களுக்கு தெரியுமா......
பதிவுசெய்தவர் ராஜ்...... 12/11/2012 11:03 இதற்கான பதில் முறையற்ற கருத்து
உங்களின் ஓட்டு எனக்கும் வேண்டும் அல்லவா, அதுக்குதான் இந்த பசப்பு வார்த்தை, பைபிள் போதனைகளைப் பின்பற்றி வளர்த்தால் அதை நடைமுறை படுத்த வேண்டியது தானே அதை செய்ய மாட்டார்கள், காரணம் அது மனித வாழ்க்கைக்கு நடைமுறை படுத்த முடியாதவற்றை அதில் மலிந்து கிடக்கிறது.
பதிவுசெய்தவர் மாஸ்கோ சர்புதீன் 12/11/2012 11:26 இதற்கான பதில் முறையற்ற கருத்து