''எம்.பி.க்கள் குழுவில் தமிழக கட்சிகள் பங்கேற்காதது வருத்தம் அளிக்கிறது''
By
First Published : 18 April 2012 01:46 AM IST
-
செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கிறார் பாஜக அகில இந்தியச் செயலாளர் முரளிதர ராவ். உடன் (இடமிருந்து) தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், அகில இந்திய
சென்னை, ஏப். 17: இலங்கை சென்றுள்ள இந்திய எம்.பி.க்கள் குழுவில் தமிழக கட்சிகள் இடம்பெறாதது வருத்தம் அளிப்பதாக பாஜக அகில இந்தியச் செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியது:
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் நிலை குறித்து ஆராய்வதற்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் இந்திய எம்.பி.க்கள் குழு இலங்கை சென்றுள்ளது.
இக் குழுவில் தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகளான அதிமுக, திமுக போன்ற கட்சிகள் இடம்பெறாதது வருத்தம் அளிக்கிறது. இக் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி குழுவில் இடம்பெறச் செய்ய மத்திய அரசு எவ்வித முயற்சியும் செய்யவில்லை. அனைவரையும் திருப்திப்படுத்தும் வகையில் பயணத் திட்டத்தையும் உருவாக்கவில்லை. இந்த விஷயத்தில் மத்திய அரசு தோல்வி அடைந்துள்ளது.
ஆனாலும், சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான எம்.பி.க்கள் குழு மூலம் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிவாரணமும், நீதியும் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அனைத்து நிலைகளிலும் சம உரிமையும், தமிழர் பகுதிகளுக்கு சுயாட்சி அதிகாரமும் வழங்க வேண்டும் என்பதே பாஜகவின் நிலை. நீண்டகாலமாக இதனை வலியுறுத்தி வருகிறோம்.
புதிய அத்தியாயம் தொடங்கும்: ஏப்ரல் 28, 29 தேதிகளில் தாமரை சங்கமம் என்ற பெயரில் மதுரையில் பாஜக 5-வது மாநில மாநாடு நடைபெறவுள்ளது. பாஜக தலைவர் நிதின் கட்கரி, அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி, மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சௌகான், கர்நாடக முதல்வர் சதானந்த கௌடா உள்ளிட்ட தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
இந்த மாநாடு முடிந்ததும் தமிழகத்தில் பாஜகவின் புதிய அத்தியாயம் தொடங்கும் என்றார்.
தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியது:
காவிரியிலிருந்து தமிழகத்துக்கு 205 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும். இதனை கேட்டுப் பெறுவது தமிழகத்தின் உரிமை. இதற்காக தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாஜக துணை நிற்கும். தேவைப்பட்டால் இதற்காக பாஜக போராடவும் தயாராக உள்ளது என்றார்.
பேட்டியின்போது பாஜக மாநில பொதுச் செயலாளர் மோகன்ராஜுலு, மாநிலச் செயலாளர் வானதி சீனிவாசன், அகில இந்திய வர்த்தக அணி பொதுச்செயலாளர் எஸ்.ஆர். சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்த பகுதியில் மேலும்
பரிந்துரைகள்
- கிரிக்கெட் வீரர் ரெய்னாவுடன், ஸ்ருதிஹாசன் நெருக்கம்?
- பிரதமர் மன்மோகன் பற்றிய அடுத்த சர்ச்சை கிளம்பிவிட்டது
- கைக்குட்டை மூலம் சைகை! ஐபிஎல் சூதாட்டத்தில் ஸ்ரீசாந்த் விநோதம்!
- 32 ஆண்டுகளுக்குப் பிறகு திரையில் இணையும் ஜோடி
- ஐபிஎல்.லில் ஸ்பாட் பிக்ஸிங் முறைகேடு: ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூவர் கைது
- மரியான் படத்துக்காக சிறுத்தையுடன் நடித்த தனுஷ்!
கருத்தை பதிவு செய்க