நாடக விழாவின் வயது 367!
By
First Published : 29 April 2012 12:00 AM IST
செல்ஃபோன்களும் இன்டர்நெட்டுமாக தஞ்சையின் கிராமங்கள் மாறத் தொடங்கிவிட்டன. ஆனால், தஞ்சையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள சாலியமங்கலத்தில் நடக்கும் நரசிம்ம ஜெயந்தியும், அதனை ஒட்டி அரங்கேறும் பாகவத மேளா நாட்டிய நாடகங்களும் மட்டும் மாறவேயில்லை.
அதுவும் கடந்த 367 வருடங்களாக எந்த விதமான தடையுமின்றி பாகவத மேளா நாட்டிய நாடகங்கள் நடத்தப்படுவது வியப்பாக இருக்கிறது அல்லவா!
நம் மரபு சார்ந்த கலை வடிவங்களில் நாட்டிய நாடகமான பாகவத மேளாவும் ஒன்று. இசை நாட்டிய நாடகம் என்பதால் பரத நாட்டிய அபிநயங்களும், கர்நாடகத்தின் யட்சகானம், ஆந்திரத்தின் குச்சுப்புடி நாட்டிய அம்சங்களும் இதில் கலந்துள்ளன.
பிரகலாத சரித்திரம், ருக்மிணி பரிணயம் போன்ற பாகவதக் கதைகளை தெலுங்கில் மரபு வழுவாத அதே கீர்த்தனங்கள், பாடல்கள், வசனங்களுடன் பார்க்கும் மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் வகையில் கலைஞர்கள் நடத்துகின்றனர்.
இவர்கள் நாடகத் துறையிலோ அல்லது சினிமா துறையிலோ பணிபுரிபவர்கள் அல்ல. அவர்கள் அனைவரும் பல்வேறு அலுவலகங்களில் பணிபுரியும் அன்பர்கள் என்பது இன்னொரு சிறப்பு.
கி.பி. 16ஆம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட அச்சுதப்ப நாயக்கர் காலத்தில் வேரூன்றியது இந்தக் கலை. நாயக்க மன்னர்களில் ஒருவரான அச்சுதப்ப நாயக்கர் தன் ஆட்சிக் காலத்தில் சாலியமங்கலத்தில் அந்தணர்களைக் குடியமர்த்தினார். அவர்களுக்கு மானிய நிலங்கள் அளித்து அவர்கள் மூலம் இக்கலையைப் பாதுகாத்தார். எனவே இந்தக் கிராமத்துக்கு அச்சுதபுரம் என்ற பெயரும் உண்டு.
தஞ்சை தரணியில் சாலியமங்கலம், மெலட்டூர், சூலமங்கலம், ஊத்துக்காடு, நல்லூர், தேப்பெருமாநல்லூர் ஆகிய ஆறு கிராமங்களில் இந்தக் கலை வேரூன்றி நடந்து வந்திருக்கிறது. தற்போது சாலியமங்கலம், மெலட்டூர், தேப்பெருமாநல்லூர் ஆகிய ஊர்களில் மட்டுமே நடக்கிறது. அதில் சாலியமங்கலத்தில் நடத்தப்படும் பாகவத மேளா நாடகங்கள் காலத்தால் பழமையானவை, தொன்மையானவை.
இவ்வூரில் வாழ்ந்த பரதம் பஞ்சநாத பாகவதர் என்பவர் சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வல்லுநராகத் திகழ்ந்தார். அத்துடன் பரத சாஸ்திரத்திலும் விற்பன்னராக விளங்கினார். மன்னர் அச்சுதப்ப நாயக்கரின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் நமது கலாசாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றினைப் பாதுகாக்கும் வகையில் ஸ்ரீபக்த பிரகலாதா, விப்ரநாராயணா, ருக்மாங்கதா, ருக்மணி கல்யாணம், சீதா கல்யாணம் ஆகிய நாட்டிய நாடகங்களை இயற்றினார்.
இந்த நாடகங்கள் இக்கிராமத்தில் ஸ்ரீராமநவமி மற்றும் ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி உற்சவங்களின் போது நடைபெற்று வந்ததாம். நிதி நிலைமை மற்றும் சில வசதிகள் குறைவால், தற்போது நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு இரண்டு நாடகங்கள் (பிரகலாதா, ருக்மணி பரிணயம்) மட்டுமே நடைபெற்று வருகின்றன.
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீதியாக பிரம்மத்தின் தாய் வழி பாட்டனார்களான கிரிராஜ கவி மற்றும் அவரது சகோதரர் ஸ்ரீ வெங்கடேசகவி ஆகியோர் சாலியமங்கலம் பாகவத மேளாவில் பங்கேற்று வந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. மேலும் காஞ்சிகாமகோடி பீடத்தின் சங்கராச்சாரியர்களில் ஒருவரான ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி சுவாமிகள் தமது சீடர் ஸித்தேந்திரயோகி என்பவருடன் ஒரு நரசிம்ம ஜெயந்தி விழாவிற்கு வந்திருந்து இதனைக் கண்டு களித்து பாராட்டியுள்ளார்கள்.
சாலியமங்கலம் கிராமத்தில் நடத்தப்படும் நாடகங்களில் முக்கியமானது பிரகலாத சரித்திரம். விடிய விடிய நடக்கும் இந்த நாடகத்தின் நிறைவு காட்சி விசேஷமானது. நரசிம்மர் பாத்திரம் ஏற்று நடிப்பவர் நரசிம்மர் முகத்தை (வெள்ளெருக்கினால் செய்யப்பட்டது. தினசரி ஆராதனைகள் உண்டு) தரித்துக் கொண்டு தத்ரூபமாக நடிப்பதைக் கண்டு வியக்கலாம்.
மேலும் ஹிரண்ய கசிபு, லீலாவதி, பிரகலாதன் மற்றும் பிற வேடங்களில் நடிப்பவர்கள் தங்கள் பாத்திரங்களை செவ்வனே செய்து வருவதும் கண்கூடு. அவர்களுக்கு ஒத்திகையே தேவையில்லை போலும்.
வேடம் தரித்து மேடை ஏறினால் மடை திறந்தாற்போல் வருகிறது வசனங்கள். பாகவதர்களின் இசை ராகத்தில் பாடப்படும் கீர்த்தனங்கள் நாடகம் முடிந்த பிறகும் நமது செவியில் ரீங்காரம் செய்துகொண்டே இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை.
புதுதில்லி சங்கீத நாடக அகாதெமி இந்த நாடகங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. இவ்வாண்டு மே 4ஆம் தேதி இரவு ஸ்ரீபிரகலாத சரித்திர நாட்டிய நாடகமும், மறுநாள் மே 5ஆம் தேதி இரவு ருக்மணி பரிணயம் நாட்டிய நாடகமும் ஸ்ரீலட்சுமி நரசிம்ம பாகவத மேளா பக்த சமாஜத்தினால் சாலியமங்கலத்தில் நடத்தப்படுகிறது.
விடுமுறையில் இருக்கும் நம் குழந்தைகளை இந்த நாடகங்களைக் காண அழைத்துச் செல்லலாமே!
எஸ். வெங்கட்ராமன்
பட உதவி: சிவசங்கரன்
இந்த பகுதியில் மேலும்
பரிந்துரைகள்
- ரெய்னா அதிரடி; இறுதிச்சுற்றில் சூப்பர் கிங்ஸ்
- சென்னையில் தொழில் அதிபர் தற்கொலை : குடும்பத்தாரும் மரணம்
- தங்கம் விலை தொடர் சரிவு: பவுனுக்கு ரூ.248 குறைந்தது
- ராமதாஸ் நலம் பெற கருணாநிதி - அகிலேஷ் யாதவ் வாழ்த்து
- மிகப் பயங்கரமான குற்றம் : பிரிட்டன் பிரதமர்
- பணியாற்றும் தகுதி இருந்தால் மனைவியிடம் இருந்து கணவன் ஜீவனாம்சம் கோர முடியாது: உயர் நீதிமன்றம்
கருத்தை பதிவு செய்க