இலங்கையில் நேரடி கள நிலவரம்

First Published : 11 October 2012 05:40 AM IST

2009-ஆம் ஆண்டில் இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. அதையடுத்து, போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் அடைக்கலம் தேடினர்.

போர் முடிந்த தற்போதைய சூழலில் அவர்களுக்குள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஊடுருவினார்களா என்பதைக் கண்டறிய முகாம்களில் தஞ்சமடைந்தவர்களிடம் விசாரணை, சோதனை என்ற பெயரில் பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

போரின்போது வசிப்பிடங்களை விட்டு வந்த மக்களை மீண்டும் அவர்களின் சொந்தப் பகுதிகளுக்கே மீள்குடியேற்றம் செய்வது இலங்கைத் தமிழர் மறுவாழ்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

அந்த மக்களுக்கு வீடுகள் கட்டித் தருவது, வாழ்வாதாரத் திட்டங்களை உருவாக்குவது போன்றவற்றில் இலங்கைக்கு உதவ இந்தியா முன்வந்தது. இதே போல், அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட  பகுதிகளில் பல்வேறு நலத் திட்டங்களை நிறைவேற்றி வருகின்றன.

ஆனால், இத்திட்டங்கள் உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த அளவுக்குப் பயன் அளிக்கின்றன என்பதை அறிய போரினால் பாதிக்கப்பட்ட முக்கியப் பகுதிகளில் "தினமணி' செய்தியாளர் ஆய்வு செய்தார்.

பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்: இலங்கையில் போரின்போது கிளிநொச்சி, வவுனியா, முல்லைத் தீவு, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. 2009-ஆம் ஆண்டு போரில் இப்பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் உயிரிழந்தனர்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை, மட்டக்களப்பு, திரிகோணமலை ஆகிய மாவட்டங்கள் 2007-ஆம் ஆண்டில் இலங்கை ராணுவத்தின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. அங்கு ஜனநாயக முறைப்படி மக்களுக்கு வாழ்வுரிமை வழங்கப்பட்டுள்ளது.

முள்வேலி முகாம் மக்கள் எங்கே? 2009-ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை அரசு ஓர் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த வவுனியா மாவட்டத்தில் முள்வேலி முகாம் உருவாக்கப்பட்டது. "மேனிக் ஃபார்ம்ஸ்' எனஅழைக்கப்பட்ட இந்த முகாமுக்கு 15 நாள்களுக்குள் வந்து தங்களின் விவரங்களைப் பதிவு செய்து கொள்வது அந்த நேரத்தில் கட்டாயமாக்கப்பட்டது. மற்ற பகுதிகளில் இருப்பவர்கள் உள்ளூர் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அந்த மக்களுக்கு நிபந்தனைக்கு உள்பட்ட சுதந்திரம் வழங்கப்பட்டது. முகாமில் வசிப்பவர்கள் அருகில் உள்ள தோட்டங்கள், தொழிற்சாலைகளில் கூலி வேலைக்குச் சென்று விட்டு தினமும் மாலையில் முகாமில் தங்கள் வருகையைப் பதிவு செய்ய வேண்டும். இவர்களில் பெரும்பாலானவர்கள் நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருந்த வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

"முகாமில் உள்ளவர்களை அவர்களின் பூர்வீகப் பகுதிகளுக்கு 180 நாள்களில் மீள் குடியேற்றம் செய்வோம்' என இலங்கை அரசு 2009 டிசம்பரில் அறிவித்தது. ஆனால், 2010, 2011-ம் ஆண்டுகளிலும் இந்தப் பணி நீடித்தது. இறுதியாக, முகாமில் இருந்த மக்கள் பூர்வீகப் பகுதிகளுக்குப் பதில் வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டனர். நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதில் தாமதம் ஏற்படுவதால் வேறு இடங்களில் அவர்கள் குடியமர்த்தப்பட்டதாக இலங்கை அரசு விளக்கம் அளித்தது.

மூன்று லட்சம் பேர் அடைக்கப்பட்டிருந்த முள்வேலி முகாமில் கடந்த ஜூலையில் 7,500 பேர் மட்டுமே இருந்தனர். இந்த ஆண்டு செப்டம்பரில் அவர்களும் முழுமையாக மீள்குடியேற்றம் செய்யப்பட்டு விட்டதாகவும் முள்வேலி முகாம் (மேனிக் ஃபார்ம்ஸ்) கடந்த 30-ஆம் தேதி மூடப்பட்டதாகவும் இலங்கை அரசு அறிவித்தது.

இந்தப் பின்னணியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டவர்களின் நிலைமையை ஆராய்ந்தால் குழப்பமும் அதிர்ச்சியும் மட்டுமே மிஞ்சின.

சிங்களர் குடியேற்றம்: யாழ்ப்பாணத்தில் சிங்களர்கள் குடியேற்றம் செய்யப்படுவதாகக் கூறப்பட்டாலும் அவர்கள் அப்பகுதியில் புதிய தொழிலில் ஈடுபடுவதையும் வாடகைக்கு வீடு எடுத்து தங்குவதையும் பார்க்க முடிகிறது. அவர்கள் தமிழர் பகுதிக்கு வருவதற்குத் தமிழர்களிடமிருந்து பெரிய அளவில் எதிர்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

"சிங்களர்களும் ராணுவத்தினரும் வசிப்பதால் எங்களுக்கு வருமானம் கிடைக்கிறது. அதனால் அவர்கள் வசிப்பதில் தயக்கம் இல்லை. பாதுகாப்பை உணருகிறோம்' என்று சொந்த வீடுகளை வாடகைக்கு விட்டு வெளியூர்களில் வசிக்கும் தமிழர்கள் கூறுகின்றனர்.

பிரபாகரன் வாழ்ந்த பகுதி: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தமது கடைசிக் காலத்தில் வாழ்ந்த இடம் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதி. அவர் வாழ்ந்த பாதாளச் சுரங்க வீடு, விடுதலைப் புலிகள் வைத்திருந்த ஆயுதங்கள், படகுகள் போன்றவை சுற்றுலாத் தலம் போல் மாற்றப்பட்ட காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்தப் பகுதியில் பொதுமக்கள் வசிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உயர் பாதுகாப்பு வளையப் பகுதியாக முள்ளிவாய்க்கால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடற்படை கட்டுப்பாட்டில் காங்கேசன்துறை: விடுதலைப் புலிகளுடனான போரின்போது மிகுந்த பாதிப்புக்கு உள்ளானது காங்கேசன்துறை துறைமுகம். இங்கு வர்த்தகப் படகுப் போக்குவரத்து இன்னும் தொடங்கப்படவில்லை. தமிழகம், காரைக்காலில் இருந்து வரும் சிமெண்ட் உள்ளிட்ட சரக்குகள் அருகே உள்ள மயிலாடி சிறு துறைமுகத்துக்கு வருகின்றன. அங்கிருந்து கடற்படைப் படகுகள் மூலம் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு சரக்குகள் கொண்டு வரப்படுகின்றன. இதே போல், இலங்கையில் இருந்தும் தேயிலை, பனை பொருள்கள் இந்தியாவுக்கு கப்பல் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

போரின்போது மூழ்கடிக்கப்பட்ட சுமார் 10 கப்பல்கள் இங்குள்ள கடல் பகுதியில் இருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளன. அங்கு அகழ்வுப் பணிகள் முடிந்த பிறகு பெரிய கப்பல்கள் துறைமுகத்துக்கு வர வழியமைக்கப்படும் என்று கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தத் துறைமுகத்தில் வடக்கு பிராந்திய கடற்படைத் தலைமையகமும் வீரர்களுக்கான பயிற்சி மையமும் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 2,000 வீரர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கிருந்து தமிழகத்தின் நாகை மாவட்டம், புதுச்சேரியின் காரைக்கால் ஆகியவை மிக அருகில் உள்ள பகுதிகளாகும்.

பலாலி விமான தளம்: இலங்கை விமானப் படையின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் உள்ள உயர் பாதுகாப்பு வளையப் பகுதி இது. இந்த தளத்தில்தான் இந்திய அமைதிப் படையினர் முதன் முறையாக 1987-ஆம் ஆண்டில் வந்திறங்கினர். பலமுறை விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளான இந்த விமானப் படைத் தளத்தை இந்திய அரசு மறுநிர்மாணம் செய்ய உதவியுள்ளது.

கேரளத்தின் திருவனந்தபுரத்துக்கு இங்கிருந்து வான் வழியாக 20 நிமிடங்களில் செல்லலாம். சிவில் விமானப் போக்குவரத்து வசதி உள்ள பலாலி விமானப் படைத் தளத்தில் இருந்து கொழும்பு நகருக்கு சில தனியார் விமான சேவைகள் நாள்தோறும் இயக்கப்படுகின்றன.

கிளிநொச்சியில் சிறப்பு மருத்துவமனை: போரில் சிக்கிச் சேதமடைந்த பகுதிகளில் கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனை மிக முக்கியமானதாகும். மறுசீரமைக்கப்பட்ட இந்த மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைக் கருவிகளையும் இந்திய அரசு வழங்கியுள்ளது. இங்குள்ள பெரும்பான்மை மருத்துவர்கள் தமிழகத்தில உள்ள பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் படித்தவர்கள் என்பது தனிச்சிறப்பு. மருத்துவர்களின் அர்ப்பணிப்பு, சேவை, எங்கும் தூய்மை, மருந்து வாசனையற்ற சுற்றுச்சூழல் போன்றவை சுகாதாரத்துக்கு எடுத்துக்காட்டாக இந்த மருத்துவமனையை விளங்கச் செய்கின்றன.

முல்லைத்தீவில் ராணுவ கெடுபிடி: விடுதலைப் புலிகளின் கோட்டையாக விளங்கிய முல்லைத்தீவில் இன்றும் ராணுவ கெடுபிடி நீடிக்கிறது. அங்குள்ள புதுக்குடியிருப்பு, நந்திக்கடல் ஆகிய பகுதிகளில் மறுவாழ்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சில பகுதிகளில் மக்கள் வசிக்கின்றனர். மனிதாபிமான மீள்குடியேற்றத்துக்கு உதவுகிறோம் என்ற பெயரில் ராணுவத்தினர் ஆயிரக்கணக்கில் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

கண்ணிவெடி அகற்றும் பணியில் மர்மம்: இலங்கை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விடுதலைப் புலிகளாலும் இலங்கை ராணுவத்தினராலும் பரஸ்பரம் வைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக இந்தியாவைச் சேர்ந்த ஹாரிசன், சர்வத்ரா ஆகிய அமைப்புகள் 2003-ஆம் ஆண்டில் ஈடுபடுத்தப்பட்டன. விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட நார்வே அரசுதான் இந்த இரு அமைப்புகளுக்கும் கண்ணிவெடி அகற்றும் திட்டத்துக்காக நிதி உதவி செய்து வந்தது.

கடந்த ஆண்டு அந்நாட்டு அரசு நிதி அளிப்பதை நிறுத்திக் கொண்டது. இப்போது இந்திய அரசு இவ்விரு அமைப்புகளுக்கும் நிதி அளித்து வருகிறது. இந்த நிதி எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது என்ற கேள்விக்கு ஹாரிசன், சர்வத்ரா அமைப்புகளின் நிர்வாகிகளிடம் இருந்து சரியான பதில் இல்லை.

2003-ஆம் ஆண்டில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக நியமிக்கப்பட்ட இந்த அமைப்புகள் 2002-ஆம் ஆண்டில் இந்திய ராணுவத்தில் பணியாற்றிய உயரதிகாரிகள் சிலர் ஓய்வுபெற்றதும் தொடங்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால் இவற்றின் செயல்பாட்டில் இந்திய ராணுவ உளவுப் பிரிவுக்கும் தொடர்பு இருக்குமா என்ற சந்தேகம் பல தரப்புகளாலும் எழுப்பப்படுகிறது.

இலங்கையில் இந்த இரு அமைப்புகளைத் தவிர வெளிநாடுகளைச் சேர்ந்த டேனிஷ் குழு, ஹலோ டிரஸ்ட், கண்ணிவெடி அகற்றல் ஆலோசனைக் குழு, ஸ்விஸ் அறக்கட்டளை ஆகிய அமைப்புகளும் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கண்ணிவெடி நிறைந்த பகுதிகள்: இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து இரண்டரை ஆண்டுகள் கடந்த பிறகும் ஏராளமான பகுதிகள் கண்ணிவெடி அகற்றப்படாத இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அவற்றில் கிளிநொச்சியில் உள்ள முகமாலை, யாழ்ப்பாணம் மாவட்டம் மருதன்கேணி வட்டத்தில் உள்ள நாகர்கோவில், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாந்தை கிழக்கு, கொக்குதொடுவை, மன்னார் மாவட்டத்தில் உள்ள மாந்தை மேற்கு, மது ஆகிய பகுதிகள் அடங்கும்.

இந்தப் பகுதியில் சுமார் 118 சதுர கிலோ மீட்டர் தூரத்துக்கு கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஹம்பன் தோட்டாவில் சீன ஆதிக்கம்: இலங்கையில் கப்பல், ரயில், வீட்டுவசதி, தொழில், வர்த்தக திட்டங்களை இந்தியா மேற்கொள்வது போல் சீன அரசு சாலை வசதி, துறைமுகக் கட்டமைப்புத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

இலங்கை முழுவதும் சாலை அமைக்கும் பணி, இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவின் சொந்த ஊரான ஹம்பன் தோட்டாவில் துறைமுகம் அமைக்கும் பணி, விமான நிலையம் அமைக்கும் திட்டங்களை சீன அரசு மேற்கொண்டுள்ளது. அங்கு ஏற்கெனவே ஆயிரக்கணக்கில் சீனக் கடற்படை வீரர்கள் பணியாற்றுகின்றனர்.

இலங்கையில் தொலைத்தொடர்புத் திட்டங்களையும் செயல்படுத்தும் சீன அரசின் விருப்பத்துக்கு இலங்கை அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இவை எதிர்காலத்தில் இந்தியாவுக்கு கவலை தரும் பிரச்னைகளாக எதிரொலிக்கும் என்ற அச்சமும் நிலவுகிறது.

இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட, போருக்குப் பிந்தைய படிப்பினை மற்றும் நல்லிணக்கக் குழு அளித்த பரிந்துரையை முழுமையாக நிறைவேற்றுவதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன. சிலவற்றை அதிகார மட்டத்தில் நிறைவேற்றலாம். ஆனால் பல பரிந்துரைகளைச் செயல்படுத்த நாடாளுமன்ற ஒப்புதலைப் பெற வேண்டும்.

A+ A A-

இந்த பகுதியில் மேலும்

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
கருத்தை பதிவு செய்க
*
1000 ஏதாவதொன்று

வாசகரின் கருத்துகள் தணிக்கைக்கு உட்பட்டவை

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.