திருநெல்வேலி: எண்ணெய்வித்துப் பயிர் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள், அனைத்துப் பட்டங்களிலும் சாகுபடியாகும் ஆமணக்கைத் தேர்வு செய்யலாம் என, வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
பருவம், ரகங்கள்: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஆமணக்கு சாகுபடி செய்யலாம். மானாவாரியாக ஆடிப்பட்டத்தில் (ஜூன் - ஜூலை) டிஎம்வி 5, டிஎம்வி 6 ரகமும், கலப்பினமாக டிவிஎம்சிஹெச் 1, ஒய்ஆர்சிஹெச் 1 ஆகிய ரகமும் பயிரிடலாம்.
இறவைப் பயிராக வைகாசிப் பட்டம் (மே - ஜூன்), கார்த்திகைப் பட்டம் (நவம்பர் - டிசம்பர்), பங்குனிப் பட்டம் (மார்ச்- ஏப்ரல்) ஆகியவற்றில் ஒய்ஆர்சிஹெச் 1 ரகம் பயிரிடலாம். தோட்டநிலத்தில் (வரப்பு) பல்லாண்டுப் பயிராக கோ 1 ரகம் பயிரிடலாம்.
நிலம் தயாரித்தல்: அமில நிலங்களைத் தவிர பிற நிலங்களில் பயிரிடலாம். நாட்டுக் கலப்பையால் 2 அல்லது 3 தடவை உழவேண்டும். மானாவாரி ரகங்களுக்கு 90-க்கு 60 செ.மீ. இடைவெளியும், இறவை ரகங்களுக்கு 90-க்கு 90 செ.மீ. இடைவெளியும் அவசியம். கலப்பினங்களில் மானாவாரிக்கு 120-க்கு 90 செ.மீ. இடைவெளியும், 150-க்கு 120 செ.மீ. இடைவெளியும் அவசியம். இறவையில் களிமண் உள்ள பகுதிகளுக்கு 150-க்கு 150 செ.மீ. அகன்ற இடைவெளி அளிக்க வேண்டும்.
விதைத் தேர்வு: சிறந்த தரமான விதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பூச்சி, பூஞ்சாண நோய்கள் தாக்கிய, உடைந்த விதைகளை நீக்கவேண்டும்.
விதைநேர்த்தி: ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் திரம் அல்லது கார்பென்டாசிம் கலந்து 4 மணி நேரம் வைத்திருந்து விதைக்க வேண்டும். மானாவாரி பகுதியில் விதைப்புக்கு 3 மணி நேரத்துக்கு முன்னர் 1 சதம் பொட்டாசியம் குளோரைடு கொண்டு விதை நேர்த்தி செய்த விதைகளை, பருவமழை தொடங்கும் முன் விதைக்க வேண்டும்.
விதைப்பு: பரிந்துரைக்கப்பட்ட இடைவெளியில், 4-க்கு 6 செ.மீ ஆழத்தில் விதைக்க வேண்டும். ஒரு குழிக்கு ஒரு விதை போதும்.
பாடு நிரப்புதல்: விதைத்த 15ஆம் நாள் பாடு நிரப்ப வேண்டும். அப்போதே குழிக்கு ஒரு செடி வீதம் விடுத்து பயிர் கலைத்தல் வேண்டும்.
உரம்: உழாத நிலத்தில் 12.5 டன் மக்கிய தென்னை நார்க்கழிவு பரப்பி உழவேண்டும். மண் பரிசோதனைப்படி உரமிடவேண்டும். கடைசி உழவின்போது ஹெக்டேருக்கு 30 கிலோ கந்தகத்தை ஜிப்சம் மூலம் இடுவதால் அதிக மகசூல் பெறலாம். மானாவாரி பகுதிகளில் 100 சதவீத மணிச்சத்து, 50 சதவீத தழை, சாம்பல் சத்தை அடியுரமாக இட வேண்டும்.
மீதமுள்ள அளவை ஒன்று அல்லது இரண்டு முறை தகுந்த ஈரப்பதத்தில் மேலுரமாக இடவேண்டும். இறவைப் பகுதிகளில், 100 சதவீத மணிச்சத்து, 50 சதவீத தழை, சாம்பல் சத்தை அடியுரமாக இட வேண்டும். மீதமுள்ள தழை, சாம்பல் சத்து உரங்களை இரண்டு சம பாகங்களாகப் பிரித்து விதைத்த 30, 60ஆவது நாளில் இட வேண்டும். ஹெக்டேருக்கு 12.5 கிலோ துத்தநாக சல்பேட்டும் 25 கிலோ பெரஸ் சல்பேட்டும் இட வேண்டும்.
களை நிர்வாகம்: ஹெக்டேருக்கு பென்டிமெத்தாலின் 3 லிட்டர் (அல்லது) ப்ளுக்ளோரலின் 2 லிட்டரை விதைத்த 3ஆம் நாளில் களை முளைக்கும் முன் தெளிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து விதைத்த 20, 40 நாளில் கைக்களை எடுக்க வேண்டும்.
அறுவடை: பயிரின் வயதைக் கணக்கில் கொண்டு அறுவடை மேற்கொள்ளவேண்டும். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆமணக்கு முத்துகள் காய்ந்திருந்தால் அறுவடை செய்யலாம். முற்றிய விதைக் கொத்தை இதர கொத்துகளைப் பாதிக்காதவாறு அறுவடை செய்ய வேண்டும். விதைகளை நிழலில் குவிக்காமல் சூரிய ஒளியில் உலர்த்தவும்.
காய்ந்த கொத்தை குச்சியால் அடித்து முத்துகளைப் பிரித்தெடுத்து, தூசியை நீக்க வேண்டும். விதை பிரித்தெடுக்கும் கருவியால் விதைகளைப் பிரித்தெடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.