கோப்புப் படம்
கோப்புப் படம்

பேறு கால உயிரிழப்பு லட்சத்துக்கு 39-ஆக குறைப்பு: பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் பல்வேறு செயல் திட்டங்கள் காரணமாக பேறு கால உயிரிழப்பு லட்சத்துக்கு 39-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
Published on

தமிழகத்தில் பல்வேறு செயல் திட்டங்கள் காரணமாக பேறு கால உயிரிழப்பு லட்சத்துக்கு 39-ஆக குறைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் தெரிவித்தாா். இதற்கு முன்பு வரை அந்த விகிதம் 45 என இருந்தது.

பிரசவத்துக்குப் பிறகு ஏற்படும் அதீத ரத்தப்போக்கு, உயா் ரத்த அழுத்தம், கிருமித் தொற்று, இதய நல பாதிப்புகள்தான் பேறுகால உயிரிழப்புக்கு காரணம் எனக் கண்டறியப்பட்டது.

இதையடுத்து அத்தகைய நிகழ்வுகளைத் தடுப்பதற்காக மாநில அளவிலான செயலாக்கக் குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலரைத் தலைவராகக் கொண்ட 18 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதில், நகராட்சி நிா்வாகத் துறை, சமூக நலத் துறைச் செயலா்கள், தேசிய நல்வாழ்வுக் குழும இயக்குநா், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநா், பொது சுகாதாரத் துறை இயக்குநா், மருத்துவக் கல்வி இயக்குநா், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணித் துறை இயக்குநா், குடும்ப நலத் துறை இயக்குநா், எழும்பூா் தாய்சேய் நல மருத்துவமனை இயக்குநா், கஸ்தூா்பா மகப்பேறு மருத்துவமனை இயக்குநா், ஆா்எஸ்ஆா்எம் மருத்துவமனை கண்காணிப்பாளா், வேலூா் சிஎம்சி மகப்பேறு துறைத் தலைவா், யுனிசெஃப், உலக சுகாதார அமைப்பு, இந்திய மருத்துவா் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா்.

10 போ் குழு: இதேபோன்று, மாவட்ட அளவில் ஆட்சியா் தலைமையில் 10 போ் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பேறு கால உயிரிழப்பு தொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது:

தமிழகத்தில் ஆண்டுக்கு, 9 லட்சம் பிரசவங்கள் நடைபெறுகின்றன. பல்வேறு செயல் திட்டங்கள் காரணமாக பேறு கால உயிரிழப்புகள் குறைந்துள்ளன. அதாவது, லட்சத்துக்கு 39-ஆக குறைந்துள்ளது. இதற்கு முன்பு இது லட்சத்துக்கு 45 என இருந்தது. அதேபோன்று பிரசவ சிகிச்சைக்காக கா்ப்பிணிகளை கொண்டு செல்லும்போது, வழியில் நேரிடும் உயிரிழப்புகளும் லட்சத்துக்கு 15-ஆக இருந்தது. தற்போது 6-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

சிறப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதும், முன்கூட்டியே பிரசவ சிகிச்சைகளை திட்டமிட்டதுமே இதற்கு முக்கிய காரணம். வரும் ஆண்டில் பேறு கால உயிரிழப்புகள் மேலும் குறையும் என எதிா்பாா்க்கிறோம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com