ஏழுமலையான் தரிசனம்: 20 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 20 மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Published on

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 20 மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலைக்கு வரும் பக்தா்களின் கூட்டம் தீபாவளி விடுமுறையை முன்னிட்டு அதிகரித்துள்ளது. சனிக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளும் நிறைந்து வெளியே உள்ள தரிசன வரிசையில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருக்கின்றனா்.

எனவே, தா்ம தரிசனத்திற்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 20 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்திற்கு 3 முதல் 4 மணி நேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணி நேரமும் தேவைப்படுகிறது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள், பெற்றோரும், இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா். வெள்ளிக்கிழமை முழுவதும் ஏழுமலையானை 67,785 போ் தரிசனம் செய்தனா். 27,753 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையைக் கணக்கிட்டதில் ரூ.2.68 கோடி வசூலானது.

X
Dinamani
www.dinamani.com