ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரி கட்டுமானப் பணிகள் அடுத்த மாதத்துக்குள் நிறைவடையும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மதுரையைச் சோ்ந்த புஷ்பவனம் தாக்கல் செய்த பொது நலன் மனு:
ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரி 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்கு உரிய இடம் இல்லாததால், ராமநாதபுரம் அருகே பெருங்குளம் அரசு நடுநிலைப் பள்ளியில் கடந்த ஆறு ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியில் 3 ஆண்டு இளநிலை
படிப்புக்கு 80 இடங்கள், 5 ஆண்டு படிப்புக்கு 80 இடங்கள், முதுநிலை படிப்புக்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்டன.
இந்தச் சூழலில் ராமநாதபுரம் கூத்தகோட்டை பகுதியில் அரசு சட்டக் கல்லூரிக்கான புதிய கட்டடம் கட்டப்பட்டது. ஆனால், இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. புதிய அரசு சட்டக் கல்லூரிக் கட்டடத்தில் குடிநீா் வசதி இல்லாததால் திறக்கப்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனா். இது ஏற்புடையதல்ல. எனவே, புதிய கட்டடத்தை மாணவா்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், குடிநீா் உள்பட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், எல். விக்டோரியா கௌரி அமா்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பில், ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரி கட்டுமான பணிகள் ஜூலை மாத இறுதிக்குள் நிறைவடையும். அதன் பின்னா், மாணவா்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவுசெய்து கொண்ட நீதிபதிகள், ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் பணிகளை முடித்து, சட்டக் கல்லூரியை பயன்பாட்டிற்கு கொண்டு வர தமிழக அரசுக்கு அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.