புதுச்சேரி அரசின் கலைப்பண்பாட்டுத்துறை இயக்குநர் எஸ்.கணேசன் (58) இன்று புதுச்சேரியில் மாரடைப்பால் காலமானார்.
புதுவை அரசில் நகராட்சி ஆணையர், பாப்ஸ்கோ நிர்வாக இயக்குநர், புதுவை அரசின் மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவன இயக்குநர் உள்பட பல்வேறு அரசுப்பொறுப்புகளில் பதவி வகித்தவர் கணேசன். புதுவை அரசின் துணைச்செயலர் அந்தஸ்தில் இருந்த இவர், கலைப்பண்பாட்டுத்துறையில் இயக்குநர் பொறுப்பு வகித்து வந்தார்.
இந்நிலையில், புதுச்சேரி வெங்கட்டாநகர் கவிஞர் புதுவை சிவம் தெருவில் உள்ளதனது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி அளவில் மாரடைப்பால் காலமானார்.
அவருக்கு தந்தை எஸ்.எம்.சுவாமிநாதன்,தாய் எஸ்.சுசிலா, மனைவி ஜி.ஞானலட்சுமி, மகள் சுகணாபிரியா, மருமகன் எம்.லோகநாதன் ஆகியோர் உள்ளனர்.
இவரது இறுதிச்சடங்கு திங்கள்கிழமை (டிச.16) காலை 9 மணி அளவில் கருவடிக்குப்பத்தில் உள்ள இடுகாட்டில் நடைபெற உள்ளது.