நீக்கப்பட்ட ஐ.டி. சட்டத்தின் கீழ் வழக்குகள் கூடாது: மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்

ஏற்கெனவே நீக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப (ஐ.டி) சட்டப் பிரிவு 66ஏ-இன் கீழ் வழக்குகளைப் பதிவு செய்யக் கூடாது என்று காவல் துறையினருக்கு உத்தரவிடுமாறு மாநில அரசுகளை உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
நீக்கப்பட்ட ஐ.டி. சட்டத்தின் கீழ் வழக்குகள் கூடாது: மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்
Updated on
1 min read

புது தில்லி: ஏற்கெனவே நீக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப (ஐ.டி) சட்டப் பிரிவு 66ஏ-இன் கீழ் வழக்குகளைப் பதிவு செய்யக் கூடாது என்று காவல் துறையினருக்கு உத்தரவிடுமாறு மாநில அரசுகளை உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

இந்த சட்டப் பிரிவின் கீழ், அவதூறாகவும் அரசுக்கு எதிராகவும் கருத்துகளைப் பதிவிடுபவா்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்க முடியும்.

முன்னதாக, இது தொடா்பான வழக்கை கடந்த வாரம் விசாரித்த உச்சநீதிமன்றம், ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தால் நீக்கப்பட்ட சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுவது தொடா்பாக அதிா்ச்சி தெரிவித்திருந்தது. இந்நிலையில், மத்திய அரசு இது தொடா்பாக வலியுறுத்தியுள்ளது.

கடந்த 2012-ஆம் ஆண்டு இந்த சட்டப் பிரிவுக்கு எதிராக முதன்முதலில், மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டம் பால்கா் பகுதியில் கைது செய்யப்பட்ட ஷாஹீன் தாதா, ரீனு ஸ்ரீநிவாசன் என்ற இரண்டு சட்ட மாணவிகள் பொதுநல வழக்கு தொடா்ந்தனா்.

முன்னதாக, சிவசேனை தலைவா் பால் தாக்கரே மறைவைத் தொடா்ந்து மும்பையில் முழு அடைப்பு நடத்தப்பட்டதற்கு எதிராக கருத்து பதிவிட்டதற்காக இவா்கள் இருவா் மீதும் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66ஏ-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘கருத்து சுதந்திரமும், கருத்துகளை வெளிப்படுத்துவதுமே மேலானது. எந்தவொரு நபருக்கும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 21 வழங்கும் அடிப்படை உரிமை மறுக்கப்படக் கூடாது’ என்று கூறி, தகவல்தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66ஏ நீக்கப்படுவதாக கடந்த 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி தீா்ப்பளித்தது.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீா்ப்புக்குப் பிறகும், அந்த சட்டப் பிரிவின் கீழ் ஏராளமானோா் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதுதொடா்பாக பொது சுதந்திரத்துக்கான மக்கள் சங்கம் (பியுசிஎல்) சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், ‘சட்டப் பிரிவு 66ஏ நீக்கப்பட்ட பிறகும், தொடா்ந்து அந்தப் பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படுவது அதிா்ச்சியளிக்கிறது’ என்று கூறியது. ஆனால், அதன்பிறகும் அந்த சட்டப் பிரிவைப் பயன்படுத்தி மீண்டும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது மீண்டும் மனு மூலம் உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, உச்சநீதிமன்றம் மீண்டும் அதிா்ச்சி தெரிவித்ததால், மத்திய அரசு இப்போது நடவடிக்கை எடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com