

நாட்டின் மத்திய ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு மதிப்பு ஏப்ரல் 11ஆம் தேதியுடன் முடிந்த ஒரு வாரத்தில் ரூ.12,000 கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது.
பொருளாதார நிலையற்றத் தன்மை, உலக நாடுகளிடைய ஏற்பட்டிருக்கும் பதற்றம் போன்றவற்றால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கடுமையாக அதிகரித்திருக்கும் நிலையில் ஆர்பிஐ இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி, ஆர்பிஐ வங்கியின் கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு கடந்த ஒரு வாரத்தில் ரூ.11,986 கோடியாக அதிகரித்துள்ளது. இதன் மூலம், ஆர்பிஐ வங்கியின் கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு ரூ.6,88,496 கோடியாக உயர்ந்திருப்பதாகவும் ஏஎன்ஐ செய்தி தெரிவிக்கிறது.
தங்கக் கையிருப்பின் மதிப்பு அதிகரிப்பு கடந்த ஓராண்டாகவே தொடர்ந்து நடந்து வருகிறது. அதன்படி, கடந்த ஓராண்டில் மட்டும் ஆர்பிஐ கையிருப்பில் இருக்கும் தங்கத்தின் மதிப்பு கிட்டத்தட்ட மூன்று மடங்காகியிருப்பதாகவும், இதனுடன், மத்திய ரிசர்வ் வங்கி, தங்கக் கையிருப்பை அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் நிலவும் பல்வேறு அபாயங்கள் காரணமாக, இந்தியா, வெளிநாட்டு வங்கிகளில் வைத்திருந்த தங்கக் கையிருப்பை சொந்த நாட்டுக்கு மாற்றும் நடவடிக்கையையும் மேற்கொண்டது.
பொருளாதார நிலையற்ற தன்மை நிலவும் நிலையில், தங்கம் மட்டுமே, ஒரு பாதுகாப்பான சொத்தாக இருக்கும் என்பது பரவலான கருத்து. ஒருபக்கம் அமெரிக்க - சீன வர்த்தகப் போரின் காரணமாக, அமெரிக்க டாலர் மதிப்புக் குறைய நேரிடலாம் என்பதால், இந்தியா, தங்கக் கையிருப்பை மேலும் அதிகரிப்பது குறித்து திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.