

திருப்பருத்திக்குன்றம் திரைலோக்கியாநாதர் ஜீனசுவாமி கோயிலில் ஸ்ரீ மகாவீர் ஜெயந்தி விழாவில் பூந்தேரில் பகவானின் சிலை வைக்கப்பட்டு திருவீதி உலா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கோயில் நகரம் எனக் கூறப்படும் காஞ்சிபுரத்தில் சைவ, வைணவ தலங்கள் மட்டுமல்லாது சமண ஸ்தலங்களும் மிகவும் புகழ்பெற்றது. அவ்வகையில் ஜைனகாஞ்சி என வழங்கப்படும் திருப்பருத்திக்குன்றம் புகழ்பெற்ற சமணர் தலமாகும். இங்குள்ள வர்த்தமானர் கோயிலில் வர்த்தமானர், புஷ்பதந்தர் ஆகியோருக்கும், பத்மபிரபா, வசுபூஜ்யர் ஆகியோருக்கும் தனித்தனியாகக் கருவறை, அர்த்த மண்டபம், முகமண்டபம், ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
பார்சுவநாதருக்கும், தருமதேவிக்கும் இங்குத் தனிச் சன்னதிகள் உள்ளன. இக்கோயிலில் முதலாம் புக்கனின் அமைச்சர் இருகப்பா என்பவரால் சங்கீத மண்டபம் கி.பி. 1387-இல் கட்டப்பட்டது. இம்மண்டப மேற்கூரையில் கி.பி. 17- ஆம் நூற்றாண்டு ஓவியங்கள் எனப் பல சிறப்புகளுடன் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் மகாவீர் ஜெயந்தி விழா மற்றும் பகவானின் ஜினக்காஞ்சி திருவீதி உலா விழா இன்று காலை 4 மணிக்கு மண்டகப்படியுடன் துவக்கியது. இதனைத் தொடர்ந்து காலை 5 மணி அளவில் பகவான் மகாவீரர் திரு வீதி உலா விழா கோலாட்டம், மேளம், நாதஸ்வரங்கள் முழங்கத் திருக்கோயிலை வலம் வந்து பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் மகாவீரர் எழுந்திருள திருவீதி உலா புறப்பட்டது.
இத்திருத்தேர் திருப்பருத்திகுன்றம், ஆட்சியர் காந்தி ரோடு வள்ளல் பச்சையப்பன் தெரு கீரை மண்டபம் உள்ளிட்ட பல்வேறு சாலை வழியாக ஊர்வலமாகச் சென்று பக்தர்களுக்கு மகாவீரர் அருள் பாலித்தார். இந்நிகழ்ச்சியில் மேல்சித்தாமூர் ஜினக்காஞ்சி மடாதிபதி கலந்துகொண்டு பக்தர்களை ஆசீர்வதித்தும் விழாவை வாழ்த்தியும் உடன் இருந்தார். இந்த நிகழ்ச்சியில் அறங்காவலர் நந்திமித்ரன், சமண சமய சான்றோர்கள், பெருமக்கள், விழாக் குழுவினர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் பிரசாதங்கள் அன்னதானங்கள் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.