

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் புதிய இளைய மடாதிபதியாக ஆந்திரத்தைச் சேர்ந்த ஸ்ரீ கணேச சர்மாவுக்கு ஏப்.30 ஆம் தேதி காஞ்சி சங்கராசாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தீட்சை வழங்கவுள்ளார்.
காஞ்சிபுரம் காமகோடி பீடத்தின் 70-வது பீடாதிபதியாக இருந்து வருபவர் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சங்கராசாரிய சுவாமிகள். இவருக்கு அடுத்ததாக 71-வது பீடாதிபதியாக ஆந்திர மாநிலம் அன்னாவரம் சேத்திரத்தில் ரிக் வேதம் முழுதும் படித்தவரான ஸ்ரீ சத்ய வெங்கட சூர்ய சுப்பிரமணிய கணேச சர்மா டிராவிட் அவர்களுக்கு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஏப்.30ஆம் தேதி சன்யாச தீட்சை வழங்கி நியமித்து ஆசி வழங்கவுள்ளார்கள்.
இப்புண்ணிய நாளானது காஞ்சிபுரத்தில் காஞ்சி காமகோடி பீடத்தை நிறுவிய ஸ்ரீ ஆதிசங்கரரின் 2534-வது ஆண்டு ஜெயந்தி மகோற்சவத்தையொட்டி நிகழவுள்ளது தனிச்சிறப்பாகும்.
கடந்த 2006 ஆம் ஆண்டு வேதபாடங்களைப் படிக்கத் தொடங்கிய காலம் முதலே ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராசாரிய சுவாமிகளின் பூரண அருளாசியைப் பெற்றவர். ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆசியுடன் யஜூர் வேதம், சாம வேதம், உபநிஷதங்கள் உள்ளிட்ட பலவற்றையும் கற்றுத் தேர்ந்தவர்.
தெலங்கானாவில் நிசாபாத் மாவட்டத்தில் பசாராவில் உள்ள ஸ்ரீஞான சரஸ்வதி தேவஸ்தானத்தில் சேவை புரிந்தவர். இவருக்குக் காஞ்சி காமாட்சி அம்மன் ஆலய வளாகத்தில் உள்ள பஞ்ச கங்கா திருக்குளத்தில் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் ஏப்.30ஆம் தேதி காலை 6 மணி முதல் 9 மணிக்குள் சன்யாஷ ஆஸ்ரம தீட்சை வழங்கவுள்ளார்கள். இத்தகவலைக் காமாட்சி அம்மன் கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.