

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயம் உள்ளிட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இயேசு சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிரோடு எழுந்ததை கொண்டாடும் ஈஸ்டர் பண்டிகை ஆண்டு தோறும் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக நிகழாண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி சாம்பற் புதனில் இருந்து தவக்காலம் தொடங்கியது தொடர்ந்து 44ஆவது நாள் புனித வியாழன் தினத்தில் இயேசு சீடர்களின் பாதங்களைக் கழுவி அவர்களுக்கு திருவிருந்து வழங்கியதை நினைவு கூறும் வகையில் ஆயர், பங்குத்தந்தையர் ஆகியோர் முதியவர்களின் பாதங்களைக் கழுவி அவர்களுக்கு திருவிருந்து வழங்கினர். தொடர்ந்து இயேசு சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளியன்று சிலுவை பாதை, மும்மணி தியான ஆராதனை ஆகியவை நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, இயேசு கிறிஸ்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததை நினைவுகூறும் வகையில், ஈஸ்டர் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதனை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயம், திரு இருதய ஆண்டவர் ஆலயம், லூர்த்து அன்னை ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் இயேசுபிரான் உயிர்த்தெழும் நிகழ்வு தத்துரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது.
பின்னர், ஈஸ்டர் பண்டிகை திருப்பலி பனிமயமாதா கோவில் பங்குத்தந்தை குமார் ராஜா தலைமையிலும், திரு இருதய ஆண்டவர் கோயிலில் ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையிலும் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று, மெழுகுவர்த்தி ஏந்தியபடி உலக அமைதி வேண்டி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
மேலும், தூத்துக்குடியில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயங்களில் அதிகாலையில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.