யுபிஎஸ்சி தேர்வு: தமிழகத்தில் 57 பேர் தேர்வு; சிவச்சந்திரன் முதலிடம்

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்திய 2024-ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணித் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 57 பேர் தேர்ச்சி பெற்றனர்.
யுபிஎஸ்சி தேர்வு: தமிழகத்தில் 57 பேர் தேர்வு; சிவச்சந்திரன் முதலிடம்
Updated on
1 min read

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்திய 2024-ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணித் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 57 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழக அளவில் சிவச்சந்திரன் முதலிடம் பெற்றார்.

தேர்ச்சி பெற்ற 57 தமிழக மாணவர்களில் 50 பேர் "நான் முதல்வன்' திட்டத்தில் ஊக்கத்தொகையைப் பெற்ற பயனாளிகள் ஆவர். முதலிடம் பெற்ற மாணவர் சிவச்சந்திரன் உள்பட 18 பேர் "நான் முதல்வன்' திட்டத்தின் பயிற்சி மையத்தில் தேர்வுக்குத் தயாரானது குறிப்பிடத்தக்கது.

முதல் 50-இல் 5 தமிழக மாணவர்கள்: அகில இந்திய அளவில் முதல் 50 இடங்களில் 5 தமிழக மாணவர்கள் இடம்பெற்றனர்.

மாணவர்கள் சிவச்சந்திரன் மற்றும் ஜீஜீ ஏ.எஸ். முறையே அகில இந்திய தரவரிசையில் 23, 25-ஆவது இடத்தைப் பெற்றனர். மாணவர்கள் சுபாஷ் கார்த்திக், ஆர்.மோனிகா, பி.பவித்ரா ஆகியோர் முறையே 29, 39, 42-ஆவது இடத்தைப் பெற்றனர்.

தமிழில் தேர்வெழுதிய இருவர் தேர்ச்சி: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்த பி.காமராஜ் (29), எஸ்.சங்கர் பாண்டியராஜ் (30) ஆகியோர் யுபிஎஸ்சி தேர்வை தமிழில் எழுதி தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டுடன் ஒப்பீடு: கடந்த ஆண்டு, 45 மாணவர்கள் மட்டுமே தமிழகத்தில் இருந்து யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டு தமிழக அளவில் முதலிடம் பிடித்த மாணவர், அகில இந்திய அளவில் 41-ஆவது இடத்தைப் பிடித்திருந்தார்.

தமிழக மாணவர்கள் சிலர் தமிழகத்துக்கு வெளியே உள்ள மையங்களையும் தேர்வு எழுத தேர்ந்தெடுத்ததால், நிகழாண்டு தேர்ச்சி அடைந்த தமிழக மாணவர்களின் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலின் பாராட்டு: "நான் முதல்வன்' திட்டத்தில் பயிற்சி பெற்று குடிமைப் பணித் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பெற்ற சிவச்சந்திரனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் "எக்ஸ்' தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு: நான் மட்டும் முதல்வன் இல்லை; தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் முதல்வனாக வேண்டும் என்ற நோக்கத்துடன், எனது பிறந்த நாளில் தொடங்கி வைத்த திட்டம்தான் "நான் முதல்வன்'.

இந்தத் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர், குடிமைப் பணித் தேர்வில் தமிழ்நாட்டுத் தரவரிசையில் முதல்வனாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் இந்தத் திட்டம், வருங்காலங்களில் லட்சக்கணக்கானோரின் வாழ்வில் ஒளியேற்றும் என்ற எனது நம்பிக்கை நிறைவேறி வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com