

பெஹல்காம் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாகப் பதவி விலக வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
ஜம்மு - காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் பெஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று(செவ்வாய்க்கிழமை) பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 28 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 20 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய திருமாவளவன்,
"காஷ்மீரில் நடந்துள்ள கொடூரம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த பயங்கரவாதத்தை நசுக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். பாஜக அரசின் தவறான கொள்கை மற்றும் ஜம்மு- காஷ்மீர் விஷயத்தில் அவர்கள் எடுத்த நடவடிக்கை, இந்த விளைவை உருவாக்கியிருக்கிறது. உளவுத்துறை தோல்வி அடைந்துள்ளது என்பதைத்தான் இந்தச் சம்பவம் உறுதிப்படுத்துகிறது.
சட்டப்பிரிவு 370-யை நீக்கிவிட்டால் அங்கு பயங்கரவாதம் இருக்காது என்று தொடர்ந்து பாஜக சொல்லிவந்தது. அதன்படியே அதனை நீக்கிவிட்டார்கள். 'பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டோம், சுற்றுலாப் பயணிகள் அங்கு தாராளமாகச் செல்லலாம்' என்று பாஜக கூறியதை நம்பிப்போனவர்கள் இன்று படுகொலையாகியிருக்கின்றனர். எனவே, இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக பதவி விலக வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிக்க | பெஹல்காம்: இஸ்லாமிய வாசகங்களை கூறக் கட்டாயப்படுத்திய பயங்கரவாதிகள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.