

கொடைக்கானல் பேரிஜம் ஏரிப்பகுதியில் திங்கள்கிழமை காட்டு யானைகள் நடமாட்டம் இருந்ததால் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
கொடைக்கானலிலிருந்து சுமார் 25 கி.மீ தூரமுள்ள பேரிஜம் பகுதி முற்றிலும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு காட்டுயானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்த இடத்தை பார்வையிட வனத்துறையினரிடம் அனுமதி பெற்ற பின்னரே செல்லமுடியும். மேலும் அப்பகுதிக்கு காலை 9 மணிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் பிற்பகல் 3 மணிக்குள் திரும்பி விடுவர்.
இந்நிலையில் பேரிஜம் ஏரிப் பகுதியில் 3 காட்டுயானைகள் நடமாடுவதை ரேஞ்சர் கிருஷ்ணசாமி பார்த்துள்ளார். இதையடுத்து அவர் மாவட்ட வனத்துறை அலுவலர் முருகனுக்கு தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளுக்கு பேரிஜம் பகுதிக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
இதுகுறித்து கொடைக்கானல் வனத்துறை ரேஞ்சர் ஒருவர் கூறியதாவது:
கொடைக்கானல் மலைப் பகுதிகளான பேத்துப்பாறை, புலியூர், கோம்பைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் நடமாட்டம் உள்ளது. தற்போது பேரிஜம் ஏரிப் பகுதியிலும் காட்டுயானைகள் புகுந்துள்ளன. எனவே இதுபோல் வேறு பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருப்பது தெரிய வந்தால் உடனடியாக வனத்துறை அலுவலகத்துக்குத் தகவல் தரவேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.