வரலாற்றுப் புகழ் மிக்க "தென்னேரி'

சென்னையிலிருந்து படப்பை வழியாக காஞ்சீபுரம் செல்லும் வழியில் வாலாஜாபாத் ஊரிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் "தென்னேரி' என்ற வரலாற்றுச் சிறப்பும், ஆன்மிகச் சிறப்பும் உடைய ஊர் அமைந்துள்ளது.
வரலாற்றுப் புகழ் மிக்க "தென்னேரி'
Updated on
3 min read

சென்னையிலிருந்து படப்பை வழியாக காஞ்சீபுரம் செல்லும் வழியில் வாலாஜாபாத் ஊரிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் "தென்னேரி' என்ற வரலாற்றுச் சிறப்பும், ஆன்மிகச் சிறப்பும் உடைய ஊர் அமைந்துள்ளது. சென்னை - ஸ்ரீபெரும்புதூர் - காஞ்சீபுரம் சாலையில், சுங்குவார்சத்திரத்திலிருந்தும் இவ்வூருக்கு வரலாம்.

தென்னேரி  எனும் திரையன் ஏரி :

இவ்வூரின் மேற்குப்பகுதியில் "கடல்' போன்று காட்சி அளிக்கும் ஏரி அமைந்துள்ளது.

சங்க இலக்கியமான பத்துப்பாட்டு, நூல்களில் ஒன்றான, பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையன் என்ற மன்னன், காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தான் எனக்கூறுகிறது.

திரைதருமரபின் உரவோனும் பல 
மலர் தலையுலகத்து மன்னுயிர் காக்கும்
முரசு முழங்கு தானை மூவருள்ளும்
இலங்கு நீர்ப்பரப்பின் வளை மீக்கூறும்
வலம்புரியன்ன வசை நீங்கு சிறப்பின்
அல்லது கடிந்த அறம் புரி செங்கோல் (பெரும் : 31  36)

என்று இளந்திரையனை பெரம்பாணாற்றுப்படை புகழ்ந்து பேசுகிறது! இம்மன்னனால் இந்த திரையன் ஏரி என்று பெயரிடப்பட்டு ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். பின்னாளில் இது தென்னேரி என அழைக்கப்பட்டது.

காசாக்குடி செப்பேடு:

பல்லவ மன்னர்களில் பல்லவமல்லன் என்று சிறப்பித்துப் போற்றப்பட்ட இரண்டாம் நந்திவர்மன் (கி.பி. 731 - 796) வெளியிட்ட காசாக்குடி செப்பேடுகளில், இவ்வேரி திரளலயதடாகம் எனவும் திரையன் ஏரி எனவும் குறிப்பிடப்படுவது சிறப்பாகும்.

சோழ மன்னர்கள்:

பல்லவ மன்னர்களுக்குப் பின்னர் ஆட்சி செய்த சோழ மன்னர்கள் இங்கு இரண்டு கோயில்களைக் கட்டி வளம் பெருக்கினார்கள்.  இவ்வூர் உத்தமசோழ சதுர்வேதி மங்கலம் எனவும் திரையனூர் ஆன குலோத்துங்கசோழ சதுர்வேதி மங்கலம் எனவும் அழைக்கப்பட்டது. கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் இவ்வூர் திரையனூர் என்றும் ஏரி தென்னேரி எனவும் அழைக்கபட்டன.

நீர் ஆதாரம்:

காஞ்சீபுரம் மற்றும் நத்தம்பேட்டை, கலியனூர், ஊத்துக்காடு பகுதிகளில் பெய்யும் மழை நீரால்,மேலிருக்கும் குளங்கள் நிரம்பி பின்னர் 16 கி.மீ. நீர்வரத்துக் கால்வாய் மூலம், தென்னேரிக்கு நீர் வந்து சேருகிறது. காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலின் கிழக்கு கோபுரத்தின் மீது பெய்யும் மழைநீர் இவ்வேரியில் கலப்பதாகவும், பாரம்பரிய நம்பிக்கையுடன் ஊரார் சிறப்பித்துக் கூறுகின்றனர். மேலும் 30 வருடங்களுக்கு முன்னர் இவ்வேரியின் நீர், பால் போன்று வெண்மையாகவும், சுவையாகவும் இருந்ததாகவும், தற்பொழுது இவ்வேரி நீர் வேளாண்மைக்கு பெரிதும் பயன்படுகிறது எனவும் கூறுகின்றனர்.

பரப்பளவு:

தென்னேரியின் ஏரிக்கரையின் நீளம் 3.80 கி.மீ. இதன் பரப்பளவு 15.5 சதுர மைல். நீர்ப்பாசன பரப்பு 5858 ஏக்கர். கொள்ளளவு 18 அடி. இவ்வேரிக்கு 5 மதகுகள், 5 கலிங்குகள் உள்ளன. 32 கிராமங்கள் இவ்வேரியினால் பயன் அடைகின்றன. இவ்வேரிக்கு அருகில் மடவிளாகம், அயிமச்சேரி,  தென்னேரி என்ற ஊர்கள் உள்ளன. ஏரிக்கரையில் எட்டியம்மன் என்ற பெயரில் சப்த கன்னியர்களின் கோயில் சிறப்பாக வழிபடப் பெறுகிறது.

திருக்கோயில்கள்:

தென்னேரி கிராமத்தில் கந்தளீசுரவரர், ஆபத்சகாயேசுவரர் என்ற இரு சிவாலயங்களும் விஜய நாராயணப்பெருமாள் (கல்யாண வெங்கடேசப் பெருமாள்) கோயிலும் உள்ளன. சிவன் கோயில்கள் இரண்டும் மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறையால் பாதுகாக்கப்பட்ட வரலாற்றுச் சின்னமாகப் போற்றிப் பராமரிக்கப்படுகிறது.

கந்தளீசுவரர் கோயில்:

தென்னேரி கிராமத்தின் கிழக்குப் பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயிலாகவும் விளங்குகிறது. கண்டராதித்தரின் தேவியரான செம்பியன் மாதேவியால் எடுக்கப்பட்டதாக விளங்குகிறது.  உத்தம சோழனின் நினைவாக அவரது தாயார் செம்பியன் மாதேவியால் எடுக்கப்பட்ட கோயில் என்ற சிறப்புடன் விளங்குகிறது. 

வரிச்சலுகை: 

மேலும் மற்றொரு கல்வெட்டு, இவ்வூரில் பயிரிடப்பட்ட கமுகு (பாக்குத்) தோட்டத்திற்கு வரிவிதிக்கும் போது முதல் பத்து ஆண்டுகளுக்கு பாதி வரியும் பத்தாண்டுகளுக்குப் பிறகு முழு வரியும் செலுத்த வேண்டும் எனவும் வாழைப் பயிரிடும் போது வாழை குலைவிடும் வரை பாதியளவும் பின்னர் முழுவரியும் செலுத்த வேண்டும் என்று "ராஜராஜன்' என்று அழைக்கப்பட்ட மண்டபத்தில் முடிவெடுத்தனர் என்று குறிப்பிடப்படுகிறது. இதனால் வேளாண்மை செய்யும் விவசாயப் பெருமக்கள் துன்பம் அடையாமல் மகிழ்ச்சியுடன் பயிர் விளைவிப்பார்கள் என்பதை அறிய முடிகிறது. இவ்வூர் வரலாற்றில் இக்கோயில் முக்கிய இடம் பெற்று விளங்கியதையும் அறியமுடிகிறது.

ஆபத்சகாயேசுவரர் கோயில்:

ஊரின் நடுவே இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் விமானம் கஜபிருஷ்ட வடிவில் (தூங்கானை மாடக்கோயில்) அமைந்துள்ளது. இவ்வடிவத்தில் தொண்டை மண்டலத்தில் பல கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. இக்கோயிலின் சிற்ப வேலைப்பாடு மிக அழகாக விளங்குகிறது.  முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டதாகும். 

தெற்குச் சுவரில் லிங்கவடிவினை வயதான முனிவர் போன்ற ஒருவர் வழிபடுவது போலவும், அவருக்கு முன்பாக சிறுவன் ஒருவன் நின்று கொண்டிருப்பதையும், கடைசியில் தேவி ஒருவர் நின்று கொண்டிருப்பது போல சிற்பத் தொகுதி காணப்படுகிறது. முனிவர் போன்றவர் கண்டாரதித்த சோழர், அருகிலே நிற்பவர் சோழ அரசி செம்பியன் மாதேவியார், முன்னர் நிற்கும் சிறுவன் உத்தம சோழனாக இருக்க கருத வாய்ப்பு உள்ளது.

தென்னேரி - விஜய நாராயணப்பெருமாள்:

இவ்வூரின் மேற்குப் பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது. மதுராந்தக பொத்தப்பி சோழன் ஆணையின்படி திரையனூர் புறப்பகுதியில் அமைந்த கிராம அலுவலர் மற்றும் தானவமுராரி சதுர்வேதிமங்கலத்து கணக்கரிடம் ஒரு காணி நிலம் விஜய நாராயண பெருமாள் வழிப்பாட்டிற்காக அளிக்கப்பட்டுள்ளது.

தென்னேரி கந்தளீசுவரர் கோயிலில் காணப்படும் முதலாம் ராஜராஜனின் 12-ஆவது ஆட்சி ஆண்டுக் கல்வெட்டில் இவ்வூர் மும்முடிச்சோழ விண்ணகராழ்வார் கோயிலின் முன் மண்டபத்தில் கூடியிருந்தனர் என்பதை அறிய முடிகிறது. எனவே இப்பெருமாள் கோயில் ராஜராஜன் காலத்திலேயே சிறப்புற்று இருந்தது என்பதை அறியமுடிகிறது. மேலும் ராஜராஜனின் சிறப்புப் பெயரான மும்முடிச்சோழன் என்ற பெயரிலேயே பெருமாள் அழைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தென்னேரி அகரம் :

தென்னேரி கிராமத்திற்கு கிழக்கே சுமார் 1 கி.மீ. தொலைவில் தென்னேரி அகரம் என்ற பகுதி அமைந்துள்ளது.இவ்வூரில் மூன்று நிலை ராஜகோபுரத்துடன் மேற்கு நோக்கி ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. சிறிய கோயில்தான். ஆனால் வழிபாடு சிறப்புடையது.

திருச்சுற்றில் வடகிழக்கு மூலையில் உள்ள மடப்பள்ளியை காஞ்சி வரதராஜப் பெருமாள் தென்னேரி ஏரியில் நடைபெறும் தெப்பத்திருவிழாவிற்காக எழுந்தருளும்போது அதை பயன்படுத்துவார்கள்.தெற்கு திருச்சுற்றில் கிழக்கு நோக்கி அலர்மேல்மங்கை தாயார் சந்நிதி அமைந்துள்ளது. 

காஞ்சி வரதராஜப்பெருமாள்:

இச்சந்நிதியை அடுத்து வடக்கு நோக்கி காஞ்சி வரதராஜசுவாமி என்னும் வரதராஜப்பெருமாள் தனி சந்நிதியில் எழுந்தருளி அருள் புரிகின்றார். கண்ணாய் ஏழு உலகுக்கு உயிராய் எங்கார் வண்ணனை என்று திருமங்கையாழ்வார் போற்றுவது போல அழகே உருவாகக் கம்பீரமாகக் காட்சி தருகிறார்.

தாதசமுத்திரம்:

ஏரியின் கரையில் ஒரு கல்வெட்டு பலகைக் கல்லில் பொறிக்கப்பட்டு காணப்படுகிறது. கி.பி. 1635-இல் சார்வரி ஆண்டு மார்கழி மாதத்தில் ஏற்பட்ட பெருமழை காரணமாக ஏரி உடைப்பு எடுக்கும் சூழ்நிலையில் விஜயநகர மன்னன் இரண்டாம் வேங்கடன் (கி.பி. 1629-1642) காலத்தில் இம்மடி தாத்தாச்சாரியார் என்பவர் மகாலட்சுமியின் அருளால் 23 மதகுகள் கட்டினார் என்று கல்வெட்டில் கூறப்படுகிறது. 

சிற்ப அழகுடன் நீர் செல்லும் வழி:

விஜயநகர மன்னர்கள் காலத்தில் பெரும்பாலும் ஏரிகள் சமுத்திரம் என்றே குறிப்பிடப்படுகிறது. அவர் அமைத்த மதகினை இன்றும் காணலாம். நீர் வெளியே எளிதாக செல்வதற்கு வளைவான அமைப்புடன் கற்களால் கட்டப்பட்டுள்ளது. அதில் சிற்ப வேலைப்பாடுகளும், மதகினை மூடுவதற்கு உள்ள பலகையினை சொருகுவது போன்ற குறுக்கு கல்லும் உள்ளது. இக்கல்லினை இரண்டு சிம்மங்கள் தாங்கியிருப்பது போன்று சிற்ப வேலைப்பாட்டுடன காணப்படுவது சிறப்பு. 

தென்னேரி கோயில்களில் காணப்படும் கல்வெட்டுக்களில் செம்பியன்மாதேவி வாய்க்கால், கண்டராதித்த வாய்க்கால், மும்முடிச்சோழன் வாய்க்கால், உத்தமசோழவதி என்ற நீர் ஆதாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இயற்கை எழில்மிக்க தென்னேரி கிராமம் வரலாற்றுச் சிறப்பும், ஆன்மீகச் சிறப்பும் கொண்ட கிராமமாகத் திகழ்கிறது. வாய்ப்பு கிடைக்கும் பொழுது தென்னேரி கிராமம் சென்று ஏரி மற்றும் கோயில்களைக் கண்டு போற்றி மகிழ்வோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com