நாட்டிலேயே அதிக கரோனா நோயாளிகளைக் கொண்டிருக்கும் மாநிலமாகக் கருதப்படும் மகாராஷ்டிரத்துக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக இன்று ஒரே நாளில் 22 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் இஸ்லாம்பூர், சங்லி பகுதிகளில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 26 பேரில் 22 பேர் சிகிச்சையின் பலனாக பூரண குணமடைந்து தொடர்ந்து எடுக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளில் கரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளும் விரைவில் குணமடைவார்கள் என்ற நம்பிக்கையை மருத்துவப் பணியாளர்களுக்கும், நோயாளிகளுக்கும் இது ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயம், மகாராஷ்டிர மாநிலத்தில் புதிதாக 229 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த மாநிலத்தில் மட்டும் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,364 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 125 பேர் குணமடைந்துள்ளனர். 97 பேர் மரணம் அடைந்துவிட்டனர்.